தாய் டயானா மரணத்தால் நிலைகுலைந்த இளவரசர் ஹாரி; 20 ஆண்டுக்குப் பிறகும் தாக்கம்
வேல்ஸ் இளவரசியும் தனது தாயுமான டயானா இறந்து இருபது ஆண்டுகள் அவரைப் பற்றி நினைக்காமல் இருந்த இளவரசர் ஹாரி, அதனால் ஏற்பட்ட தாக்கத்தை முறியடிக்க, மனநல ஆலோசனை பெற்றதாகத் தெரிவித்திருக்கிறார் .
டெய்லி டெலிகிராஃபுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய இருபதுகளின் பிந்தைய பகுதிவரை துக்கத்தை அனுபவித்ததில்லை என்றும், இரண்டு ஆண்டுகள் நீடித்த குழப்பங்கள் மொத்தமாக நிலை குலைய வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் பின்பற்றியிருந்த செயல்முறை காரணமாகத்தான் ஒரு நல்ல இடத்தில் இருந்ததாகவும் ஹாரி கூறியுள்ளார்.
தற்போது இளவரசர் ஹாரிக்கு 32 வயது, தனது கோபத்தை வெளியேற்ற குத்துச்சண்டை மிகவும் உதவியதாக கூறியுள்ளார்.
மனநலம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் பலருக்கு, தான் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், மனம் இலகாகும் என்ற நம்பிக்கையில்தான் பேச முன்வந்ததாக பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரி தன்னுடைய சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் வில்லியத்தின் மனைவி கேத் மிடில்டன் ஆகியோருடன் இணைந்து மன ஆரோக்கிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.
நாளிதழின் செய்தியாளர் பிரையோனி கோர்டனிடம் பேசிய இளவரசர் ஹாரி,''என்னுடைய தாயை 12 வயதில் இழந்து, கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய அனைத்து உணர்வுகளையும் அடக்கி வைத்திருந்தது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, என்னுடைய பணியிலும் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.''
வேல்ஸ் இளவரசி டயானா 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானார்.
''மண்ணிற்குள் தலையை புதைத்து கொள்வதுப்போல தான் அப்போது அந்த சூழலை கையாண்டேன், தாயைப்பற்றி நினைத்துப் பார்க்க மறுத்தேன், ஏனென்றால் அது எந்த விதத்திலாவது பயன் தருமா?''
''அப்படி நினைப்பதால் நம்மை அது மேலும் சோகமாக்கும் என்று நினைத்தேன், அவ்வாறு நினைப்பதால் என் தாய் திரும்பி வந்துவிடப்போவதில்லை. உணர்ச்சிப்பூர்வமான பக்கத்திலிருந்து பார்த்தோமானால், என்னுடைய உணர்ச்சிகள் எதனுடைய அங்கமாக இருக்கக்கூடாது என்ற மனநிலையில் நான் இருந்தேன்.''
இளவரசர் ஹாரி தன்னைத்தானே, வழக்கமான 20,25,28 வயது நிரம்பிய ஒருவர் வாழ்க்கை அற்புதமாக உள்ளது அல்லது வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று இருந்ததாகவும், அது சரியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய சகோதரர் இளவரசர் வில்லியம் தன்னிடம் பேசியதை தொடர்ந்து தான் செயல்பட முடிவு எடுத்ததாக கூறுகிறார்.
இளவரசர் வில்லியம் ஹாரியிடம்,''இந்த சூழலை உண்மையில் நீ சமாளிக்க வேண்டும். உன்னை எதுவுமே பாதிக்கவில்லை என்று நினைப்பது சாதாரணமான விஷயமல்ல,'' என்று கூறியிருக்கிறார்.
டெய்லி டெலிகிராப் செய்தியாளர் கோர்டன் ஏற்கனவே தான் அனுபவித்து வந்த புலிமியா எனப்படும் உணவு கோளாறு பிரச்சனை, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம் மற்றும் துன்புறு எண்ணங்கள் குறித்த மன பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி அவரே பேசியுள்ளார்.
இளவரசர் ஹாரி உடன் அறையில் தனியாக பேட்டி எடுத்ததாக கூறியுள்ளார்.
''ஹாரி தன்னுடைய கருத்துக்களை தெளிவாக எடுத்து வைத்தார். அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசியது எனக்கு ஆச்சியமாக இருந்தது'' என்கிறார் கோர்டன்.
''தான் எவ்வாறு ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், தன் வாழ்க்கை எவ்வளவு குழப்பம் நிறைந்ததாக இருந்தது என்பது பற்றியும் என்னிடம் பேசினார். 'எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, நானே ஒரு பிரச்சனையாக இருந்துள்ளேன்' என்றார். தன்னுடைய சகோதரர் தலையிட முயன்ற போது சமீபத்திய காலம் வரை அவரை புறக்கணித்ததாக ஹாரி தன்னிடம் கூறினார்'' என்று கோர்டன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கலாம் :
பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் பாடப்புத்தகம்
திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்
நியூசிலாந்தில் கடையை மூடுகிறது கேட்பரி நிறுவனம் :


















Click it and Unblock the Notifications