"துப்பாக்கி முனையில் சோதித்தனர்".. ஏர்போர்ட்டில் பெண் பயணிகளின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. அதிர்ச்சி
தோஹா: கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் விவாத பொருளாகி உள்ளது. கடந்த வருடம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது.
கத்தாரில் பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள். தங்களுக்கு அநீதி நேர்ந்தது எப்படி என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளனர். கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்தது.
அங்கு பெண்கள் கழிவறையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும்
குழந்தை
இதையடுத்து குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்பட்டன. அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த 13 ஆஸ்திரேலிய பெண் பயணிகள் தனிப்பட்ட சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பிரான்ஸ், நியூசிலாந்தை சேர்ந்த பெண் பயணிகள் சிலரிடமும் சோதனை செய்யப்பட்டது. அதாவது பெண்களின் பெண் உறுப்பை சோதனை செய்து, அவர்கள் அப்போது குழந்தை பெற்றுக்கொண்ட அறிகுறி உள்ளதா என்று பார்த்து உள்ளனர்.
கொடுமை
விமானம் ஏற காத்து இருந்த பெண் பயணிகளை கண்டிப்புடன் இழுத்து வந்து அவர்களின் பெண் உறுப்பில் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் கத்தார் விமான நிலையத்திற்கு எதிராக 7 ஆஸ்திரேலிய பெண்கள் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளனர். Marque Lawyers என்ற அமைப்பு மூலம் இவர்கள் வழக்கு தொடுக்க உள்ளனர். இந்த நிலையில்தான் ஏர்போர்டில் நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மௌனம் கலைத்துள்ளனர்.
பெண்கள் பேச்சு
பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், அந்த சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அதை பற்றி நான் நினைக்காத ஒரு நாள் கிடையாது. தினமும் என்னை அந்த நினைவு துரத்திக்கொண்டே இருக்கிறது. அந்த கொடூரத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த சம்பவம் அந்த அளவிற்கு என்னை பாதித்துவிட்டது, என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி
பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் பேட்டியில், துப்பாக்கி முனையில் என்னை அழைத்து சென்றனர். என்னை சுற்றி வளைத்த அதிகாரிகள் துப்பாக்கி முனையில் வெளியே நின்ற ஆம்புலன்சுக்கு அழைத்து சென்றனர். முதலில் துப்பாக்கி முனையில் என் உடலில் சோதனை செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உள்ளே மருத்துவர் ஒருவர் பெண் உறுப்பில் சோதனை செய்தார், என்று குறிப்பிட்டுள்ளார்.
சோதனை கொடூரம்
நியூசிலாந்து பெண் அளித்த பேட்டியில், எங்களிடம் சோதனை செய்யட்டுமா, வேண்டாமா என்று அனுமதி கூட கேட்கவில்லை. எங்களால் "நோ" கூட சொல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டனர்.எந்த ஒரு பெண்ணும் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்க கூடாது. அந்த கொடூரத்தை கடந்து செல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்பு
இதற்கு கத்தார் ஏர்போர்ட் நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. அந்நாட்டு பிரதமர் பொதுவில் மன்னிப்பு கேட்டார். அதேபோல் கத்தாரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளுக்கு புதிய பயிற்சி அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
பயிற்சி
ஆனால் இத்தனை செய்தும் அந்த பெண்களிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்கப்படவில்லை. அந்த பெண்கள் யாரிடமும் கத்தார் விமான நிலைய நிர்வாகம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள கூட முயலவில்லை. இதையடுத்தே அந்த பெண்கள் தற்போது கத்தார் விமான நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.