ஆயிரக்கணக்கான யாஸிதிகள் குழுமியதால் உணவுப் பொட்டலம் போட முடியாமல் திரும்பிய விமானம்
பாக்தாத்: கடுமையான பசி மற்றும் தாக்குதல் அபாயத்தால் வாடி வரும் யாஸிதி சிறுபான்மையினருக்கு உணவுப் பொட்டலங்களைப் போட வந்த உதவி விமானம், ஆயிரக்கணக்கில் கூடிய யாஸிதி மக்களால், எப்படி உணவுப் பொட்டல்ததைப் போடுவது என்று தெரியாமல், மீண்டும் திரும்பிச் சென்று விட்டது.
மிகப் பெரிய அளவில் அகதிகள் கூடியிருந்த நிலையில் உணவுப் பொட்டலங்களைப் போட்டால் அவர்களுக்குள் பெரும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என்பதால் உதவி விமானம் திரும்பிச் சென்று விட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த விமானப்படை விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் சிஞ்சார் மலைப் பகுதிக்கு வந்தபோதுதான் இந்த நெருக்கடி ஏற்பட்டு விட்டது. அங்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்புவதற்காக ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தவர்களும், கிறிஸ்தவர்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர். குடிநீர், சாப்பாடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மோசமான நிலையில்
மலைப் பகுதியில் உரிய தங்குமிட வசதி இல்லாமல், சாப்பாடு, குடிநீர் இல்லாமல் கடும் குளிரிலும், வெயிலிலும் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கொலைகார தீவிரவாதிகள்
மறுபக்கம் மனிதகுணமே இல்லாத ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களை கொத்துக் கொத்தாக வேட்டையாடி வருகின்றனர். 500க்கும் மேறப்ட்டோரை இதுவரை அவர்கள் மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பலரை உயிருடன் புதைத்துள்ளனர் தீவிரவாதிகள்.

விமானம் மூலம் உதவிகள்
இந்த மக்களுக்கு தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் விமானங்கள் மூலம் உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றன. குடிநீர், உணவுப் பொட்டலங்கள் விமானத்திலிருந்து போடப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து விமானத்தின் தவிப்பு
இந்த நிலையில் உதவிப் பொருட்களுடன் வந்த இங்கிலாந்து விமானப்படை விமானம், உணவுப் பொருட்களைப் போட முடியாத நிலைக்குப் போய் திரும்ப நேரிட்டுள்ளது.

பெரும் கூட்டம்
காரணம், உணவுப் பொருட்களைப் பெற மிகப் பெரிய அளவில் யாஸிதிகளும், கிறிஸ்தவர்களும் கூடி விட்டனர். ஒரு உணவுப் பொட்டலத்தையும் போட முடியாத நிலை. மீறிப் போட்டால், அதை பெற கூட்டம் முண்டியடிக்கும், நெரிசல் ஏற்படும். அதில் சிக்கி பலர் இறந்து போக நேரிடும் என்ற இக்கட்டான நிலை. இதனால் அந்த விமானம் திரும்பிப் போய் விட்டது.

ஒன்றரை லட்சம் பேரை மீட்க புதிய நடவடிக்கை
இதற்கிடையே, குர்திஷ் படையினருடன் இணைந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள், மலையில் சிக்கித் தவித்து வரும் ஒன்றரை லட்சம் பேரையும் பத்திரமாக மீட்க புதிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

20,000 பேர் மீட்பு
இதுவரை கடந்த 48 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பலர் குர்திஷ் நகரான அர்பிலுக்குப் போயுள்ளனர்.

எங்கு போவது என்றே தெரியவில்லை
பல யாஸிதி இனத்தவர்களுக்கு தப்பித்து எங்கே போவது என்றே தெரியவில்லை. தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பெண்கள், குழந்தைகளுடன் கண்ணுக்குத் தெரியும் திசையில் தப்பி ஓடி வருகிறார்கள். பலர் சிரியா நாட்டுக்குத் தப்பி ஓடியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தப்பி ஓடுவது பார்க்கவே மிகக் கொடுமையாக உள்ளது.

குடும்பங்கள் சிதறிய பரிதாபம்
பல குடும்பங்கள் சிதறிப் போய் விட்டன. குழந்தைகளைக் காணாமல், மனைவி, கணவரைக் காணாமல் பிற உறவுகளைக் காணாமல் பலர் பரிதவிப்பது கண்களில் ரத்தத்தை வர வைப்பதாக உள்ளது.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய பெண்கள்
நூற்றுக்கணக்கான பெண்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை பாலியல் அடிமைகளாக அவர்கள் பயன்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications