சிட்னி முற்றுகை கவலை அளிக்கிறது : தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் டிவிட் போட்ட ராஜபக்சே!
சிட்னி : சிட்னியில் உணவு விடுதிக்குள் தீவிரவாதிகளால் 13 பேர் பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் பட்டிருப்பது கவலை அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்ட்டின் பிளேஸ் பகுதியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் என்ற ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து, அங்கிருந்த 13 பேரை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடியையும் அவர்கள் பறக்க விட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி: சிட்னி பிணைக்கைதி நிலவரம் பற்றி ஆழ்த்த கவலை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 15, 2014
இந்த சம்பவத்திற்கு டுவிட்டர் வாயிலாக இந்தியப் பிரதமர் மோடி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘சிட்னி பிணைக்கைதி நிலவரம் பற்றி ஆழ்த்த கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை அவர் தாய் மொழியான சிங்களத்தில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அபாட் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியர்கள் பயமின்றி தங்களின் பணியை தொடருங்கள்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.