இடிக்கப்பட்ட இந்துக் கோவிலை மீண்டும் கட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் இடிக்கப் பட்ட இந்துக் கோயிலை மீண்டும் கட்டமைக்க பிரபல கட்டிடக் கலை நிபுணரை நியமிக்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம், தேரி கிராமத்தில் கடந்த 1919ம் ஆண்டு ஸ்ரீபரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற துறவி காலமானார். அவரது நினைவாக, அவர் இறந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டது. அங்கு பாகிஸ்தான் இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

கடந்த 1997-ம் ஆண்டு முஸ்லிம் பழமைவாதிகளால் இந்தக் கோயில் இடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தை உள்ளூர் இஸ்லாமிய மதத் தலைவர் ஆக்கிரமித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இந்துக் கோயில்களின் புனிதத் தன்மையை கெடுக்கும் வகையில் விஷமச் செயல்கள் அடிக்கடி நடப்பது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், தேரி கிராம இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவமும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேரி கிராமத்தில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தந்து அதை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீதான மறுவிசாரணையில், குழு அமைத்து இந்து கோயிலை அதே கலை நுணுக்கத்துடன் கட்டமைக்க பிரபல கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை தேர்வு செய்து நியமிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications