"இனி தாக்குதலை அதிகரிப்போம்!" கீவ் நகரில் ரஷ்யா நடத்திய திடீர் அட்டாக்..என்ன நடந்தது? பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த போரை ஆரம்பித்ததாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பல லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் அதிபர் புதின் போரை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை. போர் தொடங்கிய சில நாட்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை.

உடன்பாடு
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட்டு, நடுநிலையான முடிவை எடுப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ராணுவம் ஒப்புக்கொண்டது.

ரஷ்யா கப்பல்
இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பும் தாக்குதலை முழுமையாக நிறுத்தவில்லை. ரஷ்ய மண்ணில் புகுந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா சாடி வருகிறது. இந்தச் சூழலில் ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான மோஸ்கவா கப்பலை உக்ரைன் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது இரு தரப்பினருக்கும் இடையேயான பிரச்சினையை அதிகப்படுத்துவதாக இருந்தது.

தலைநகர் கீவ்
உக்ரைன் நாட்டின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவோம் என்று ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்தது. இது குறித்து ரஷ்ய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவில் உக்ரைன் படைகளின் தாக்குதல் அதிகரித்து உள்ள நிலையில், வரும் காலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் எங்கள் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும்.

S-400 ஏவுகணை
கடந்த வியாழக்கிழமை கலிப்ர் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி கீவ் அருகே இருந்த உக்ரைன் ராணுவ மையம் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களது இந்த தாக்குதல் காரணமாக அங்கு இருந்த நீண்ட தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிளிமோவோ பகுதியில் உள்ள கிராமத்தில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் நாட்டின் Mi-8 ஹெலிகாப்டரை S-400 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினோம்" என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் விளக்கம்
நேற்று வியாழக்கிழமை ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள கிராமத்தில் உக்ரைன் ஷெல் தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் எந்தவொரு கிராமத்தில் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications