Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாலரின் கதை முடியுது.. ரஷ்யா கையில் பெரிய ஐடியா.. டிரம்புக்கு ‛பிரிக்ஸ்' நாடுகள் கொடுக்கும் சம்மட்டி அடி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக ‛பிரிக்ஸ்' நாடுகள் புதிய கரன்சியை கொண்டு வர உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் ரஷ்யா பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. டாலருக்கு மாற்றாக ‛பிரிக்ஸ்' நாடுகளுடன் டிஜிட்டல் ரூபிள் கரன்சியை கொண்டு வருவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு கிடுகிடுவென சரியும் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

russia-planned-for-digital-ruble-to-break-dollars-trade-with-brics-nation

அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத வரியை விதித்து தற்போது அதனை திரும்ப பெற்றுள்ளார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யாவிடம் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் இன்னும் சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யாவிடம் பிற நாடுகள் வர்த்தகம் செய்வதை தடுக்கும் வேலையில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை டிரம்ப் ரத்து செய்து தொடர்ந்து ஆயில் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஷ்ய வங்கி ஆளுநர்

இதனால் தற்போது அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ரஷ்ய வங்கி(நம் நாட்டின் ரிசர்வ் வங்கி போல் ரஷ்யாவில் செயல்படும் வங்கி) ஆளுநர் எல்விரா நபிஉல்லினா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்தார். அதாவது தற்போது உலகம் முழுவதும் டாலரில் தான் பல நாடுகள் வர்த்தகம் செய்து வருகின்றன. இதனால் தான் டாலருக்கான மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

ரஷ்யாவின் புதிய திட்டம்

இந்நிலையில் தான் டாலருக்கு மாற்றாக பிற கரன்சிகளை வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா வைத்துள்ளது. தற்போது நம் நாட்டுடன் ரஷ்யா ரூபாயிலும், சீனாவுடன் யுவாங்கிலும் வர்த்தகம் செய்து வருகிறது. இப்படியான சூழலில் தான் இன்னொரு புதிய திட்டத்தை ரஷ்யா அமல்படுத்த உள்ளது.

இதுபற்றி ரஷ்ய வங்கி ஆளுநர் எல்விரா நபிஉல்லினா கூறியதாவது: ‛‛அமெரிக்க டாலர் மீதான சார்பை குறைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்யா தனது டிஜிட்டல் நாணயமான டிஜிட்டல் ரூபிளை பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத்துக்கு திட்டமிட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் 1ம் தேதி டிஜிட்டல் ரூபிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது'' என்றார்.

செய்தி தொடர்பாளரின் கருத்து

இதுபற்றி ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‛‛2022 உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கான டாலர் மற்றும் யூரோ கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் ரஷ்யா சொந்த நாட்டுப் பணத்தைப் பயன்படுத்த தொடங்கியது., டாலர் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நாணயம். இதனால் அமெரிக்காவுடன் டாலரில் வர்த்தகம் செய்கிறோம்.

அதேவேளையில் பிற நாடுகளுடன் வேறு கரன்சியில் வர்த்தகம் செய்கிறோம். இது எந்த வகையிலும் பிற நாடுகளை பாதிக்காது. நாங்கள் ஒருபோதும் டாலரை கைவிடவில்லை. ஆனால் அமெரிக்கா தான் எங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. அதேவேளையில் வேறு நாட்டு வர்த்தகத்தில் டாலர் பயன்பாடு என்பது பின்னடைவை சந்திக்கலாம்'' என்றார். இதன்மூலம் அவர் மறைமுகமாக ரஷ்யா வங்கி ஆளுநர் எல்விரா நபிஉல்லினாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து ரஷ்யா

இதுபற்றி ரஷ்ய வர்த்தக சம்மேளனத் தலைவரான திமூர் ஐட்டோவ், ‛‛டிஜிட்டல் ரூபிள் என்பது ஒரு சர்வதேச திட்டமாக இருக்கும். இதற்கு உள்நாட்டில் தேவை இருக்காது. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு தேவையானதாக இருக்கும். இது அங்கீகரிக்கப்பட்டால், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் நாணயங்கள் ஒரு பொதுவான கட்டமைப்பு மற்றும் ஒற்றை ஒழுங்குமுறை என்ற வகையில் ஒன்றிணையும்'' என்றார்.

ஏற்கனவே ரஷ்யாவை போல் சீனாவும் படிப்படியாக டாலர் வர்த்தகத்தில் இருந்து விலகி வருகிறது. சீனாவின் மத்திய வங்கி தனது டிஜிட்டல் யுவானை (e-CNY) உலகளாவிய வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது சீனா பாணியில் ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு

மேலும் விரைவில் நம் நாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகள் தங்களது டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

‛பிரிக்ஸ்' கூட்டமைப்பை எடுத்து கொண்டால் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா இல்லை. இதில் ரஷ்யா, சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், ஈரான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு பகையாளிகளாக உள்ளன. இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகளாவிய வர்த்தகத்துக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டிரம்ப் வார்னிங்

இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த விஷயத்தில் டொனால்ட் டிரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பை எதிர்த்து வருகிறார். டாலருக்கு நிகராக மாற்று கரன்சியை பயன்படுத்தினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்காவுடன் எந்த நாட்டையும் விளையாட அனுமதிக்க முடியாது.

உலகளவில் டாலரின் இருப்பை உறுதி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். டாலருக்கு மாற்றாக உலகளவில் இன்னொரு டிஜிட்டல் நாணயத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மிரட்டல் விடுத்து இருந்தார். இப்படியான சூழலில் ரஷ்யாவின் இந்த தகவல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+