மெட்டா அதிகாரியை "வான்டட்" லிஸ்டில் வைத்த ரஷ்யா.. கிரிமினல் விசாரணை தொடக்கம்.. என்னாச்சு
மாஸ்கோ: மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் மிகெப்பெரும் சமூக வலைத்தள ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக் , இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது அலுவலகத்தை வைத்துள்ளது. அந்த வகையில், ரஷ்யாவிலும் மெட்டா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.

எனினும், கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது குறித்து ரஷ்யா தெரிவிக்கவில்லை. மெட்டா நிறுவனத்தின் ஊழியர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு எதிராக கிரிமினல் விசாரணையை தொடங்கியிருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் விசாரணைக்குழு தெரிவித்து இருந்தது. கிரிமினல் விசாரணை எதிர்கொண்டுள்ள நபர்களில் ஆண்டி ஸ்டோனும் இடம் பெற்று இருந்தார்.
மெட்டா நிறுவனத்தின் தளங்களில் ரஷ்யா ராணுவத்திற்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி பயங்கரவாத செயல்களை தூண்டியதாக விசாரணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது. எனவே இது தொடர்பாகத்தான் ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக விசாரணையை தொடங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த தவறான தகவல்களை கூகுள் நிறுவனம் அழிக்க தவறியதாகவும் அதற்காக 4 மில்லியன் ரபுள்ஸ் (டாலர் 44,582) அபராதமும் விதித்து இருந்தது. இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு மூன்று நாட்களே ஆன நிலையில் தற்போது மெட்டா நிறுவனத்தின் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications