'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன.
கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பின்தங்கிய நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் கூட வைரஸை கட்டுப்படுத்த திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ்
அப்படி தான் இப்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 40,251 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல், ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு இதுவாகும். அதேபோல உயிரிழப்புகளும் கையை மீறி செல்லும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

பொது விடுமுறை அறிவிப்பு
இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கடந்த சனிக்கிழமை முதல் வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையை அறிவித்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். கொரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்திய பிறகு, பெரியளவில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் ரஷ்யா விதிக்காமல் இருந்தது. ஸ்புட்னிக் வி வேக்சின் பணிகளை மேற்கொண்ட ரஷ்யா, அதன் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என நம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் நிலை
ரஷ்யாவில் கடந்த பல மாதங்களாகவே இலவச வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் உலக அளவில் வேக்சின் பணிகளை முதலில் முன்னெடுத்த நாடுகளில் ஒன்று ரஷ்யா ஆகும். இருப்பினும், பல்வேறு காரணங்களால் மக்கள்தொகையில் வெறும் 32.5% பேருக்கு மட்டுமே ரஷ்யா 2 டோஸே வேக்சினை முழுமையாகச் செலுத்தியுள்ளது. வேக்சின் பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் இந்தச் சூழலில், வரும் விடுமுறை நாட்களில் ரஷ்யர்கள் சுற்றுலா செல்வது மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் தீவிரம்
இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 8,472,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது.

ரஷ்யா கொரோனா பாதிப்பு
அதேபோல இதுவரை ரஷ்யாவில் 237,380 உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா தொடர்பாக ரஷ்யா அரசு பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாகவும், கடந்த செப். மாதம் மட்டும் சுமார் 44,265 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளியியல் நிறுவனம் ரோஸ்டாட் தெரிவித்துள்ளது. இது ரஷ்யா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தரவுகளை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.












Click it and Unblock the Notifications