சிரியாவை நவீன ஆயுதங்களை சோதிக்கும் சோதனைக் களமாக்குகிறது ரஷ்யா... 'நேட்டோ' பகீர் குற்றச்சாட்டு
பிரெஸ்லெஸ்: சிரியாவை தம்முடைய நவீன ஆயுதங்களை சோதிக்கும் சோதனைக் களமாக பயன்படுத்துகிறது ரஷ்யா என்று 'நேட்டோ' அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குகிறோம் என கூறிக் கொண்டு ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. பின்னர் படிப்படியாக ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியது. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களையும் ரஷ்யா களமிறக்கியுள்ளது.

ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சிக் குழுவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் 28 நட்புநாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பு ரஷ்யாவின் இத்தலையீட்டை கடுமையாக எதிர்த்துள்ளது. இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறியதாவது:
சிரியாவில் தற்போது நடந்து கொண்டிருப்பதை நேட்டோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. சிரியாவை ரஷ்யா தன்னுடைய அதிநவீன ஆயுதங்களை சோதித்துப் பார்க்கும் சோதனைக் களமாக பயன்படுத்துகிறது.
சிரியாவில் ரஷ்யா படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேட்டோ படைகள் பயன்படுத்தும் வான்பரப்பில் ரஷ்யா விமானப் படை அத்துமீறி நுழைகிறது.
இது தொடர்பாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் ரஷ்யாவின் செயல்பாடுகளோ ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவை உருவாக்குகிறது.
துருக்கி வான்பரப்புக்குள் ரஷ்யா விமானங்கள் அத்துமீறி நுழைந்ததை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications