ஷாக்.! ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்த அலெக்ஸி நவல்னி சிறையிலேயே மர்மமான முறையில் மரணம்! என்ன நடந்தது
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் அலெக்ஸி நவல்னி.. புதின் சொத்து மதிப்பு, அவரது ஆடம்பர வாழ்க்கை, சொகுசு பங்களா என்று ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் வீடியோவாக வெளியிட்டு மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவல்னி.

மரணம்: இவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவர் ஆர்க்டிக் சிறையில் இருந்து வந்தார். இதற்கிடையே சிறையில் இவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து எதுவும் கூறவில்லை.
இது தொடர்பாக ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அலெக்ஸி நவல்னி சிறையில் வழக்கம் போல வாக்கிங் சென்று வந்தார். அப்போது திடீரென அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். மேலும், ஆம்புலன்ஸ் கூட சம்பவ இடத்திற்கு விரைந்தது.
ரஷ்ய சிறை துறை: அவரை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் இல்லை. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் திடீரென இப்படி சிறையிலேயே உயிரிழந்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தகவல் இல்லை: அதேநேரம் நவல்னியின் மரணம் தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் தெரிவித்தார். நவல்னி தரப்பு வழக்கறிஞர் அவரது சடலத்தைப் பார்க்க இப்போது சிறை இருக்கும் இடத்திற்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நவல்னியின் மரணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான 47 வயதான நவல்னி, ரஷ்ய அதிபர் புதின் குறித்துத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நாட்டின் கடுமையான சட்டங்களைத் தாண்டி அவர் புதின் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இதனால் ஒரு கட்டத்தில் புதினுக்கு எதிராக ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன
கொலை முயற்சி: 2021ஆம் ஆண்டில் அவரை கொலை செய்ய முயற்சி நடத்தப்பட்டது. இருப்பினும், அதில் அவர் தப்பினார். ஜெர்மனி நாட்டில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். அதன் பிறகு ரஷ்யா சென்ற அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ரஷ்ய அதிபருக்கு எதிராக வீடியோ வெளியிட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட்டது. அவருக்குப் பல வழக்குகளில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் தான் அவர் வடக்கு சைபீரியாவில் உள்ள ரஷ்யாவின் யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக்கு மாற்றப்பட்டார். அந்த சிறையில் தான் இப்போது அவர் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications