ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் இன்னொரு வான் பாதுகாப்பு கேடயம்.. எங்கே நிறுத்த போறாங்க தெரியுமா?
மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவிடம் இதுவரை 3 வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பிறகாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் தாக்குதலை நடத்த முயன்றது. அப்போது இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ் 400 கேடயம்தான் உறுதி செய்தது. இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 அமைப்பை வாங்க இந்தியா தீவிரம் காட்டியது. இதில் 4-வது எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தியாவுக்கு வந்து சேர உள்ளது.

அதாவது மே மாதம் மத்தியில் வந்து சேரும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய இன்னொரு வான் பாதுகாப்பு அமைப்பு நவம்பர் மாதத்தில் வந்து சேரும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் 5 வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மூன்று வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டு இந்திய வான் படையில் பயன்பாட்டுக்கு உள்ளன.
ஆனால், 4 வது வான் பாதுகாப்பு அமைப்பு கிடைப்பதில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. சர்வதேச அளவில் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு , ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றால் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு வழங்குவது தாமதம் ஆன நிலையில், ஒருவழியாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் குழு, வான் பாதுகாப்பு அமைப்பை நேரில் சென்று ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததையடுத்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வரும் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு ராஜஸ்தானின் எல்லையோர பகுதியில் நிறுத்திவைக்கப்பட உள்ளது. பாகிஸ்தானும் ராஜஸ்தானும் 1070 கி.மீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எனவேதான் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் ராஜஸ்தான் செக்டாரில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இதுதொடர்பாக கூறுகையில், "மீதமுள்ள இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளின் விநியோகம் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இந்த அமைப்புகளை இயக்க இந்திய பணியாளர்களுக்கு ரஷ்யா ஏற்கனவே பயிற்சி அளித்துள்ளது. மொத்தம் 10 'S-400' பிரிவுகளும் செயல்பாட்டுக்கு வந்த பின், இந்தியாவின் வான்வெளி மிக வலுவாக பாதுகாக்கப்படும்" என்றார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று எஸ் 400 பாதுகாப்பு அமைப்புகளும் பஞ்சாப் செக்டார், சிலிகுரி காரிடர் மேற்கு வங்காளத்தின் சிக்கன் நெக் பகுதி அருகேயும், மற்றொரு எஸ் 400 குஜராத் ராஜஸ்தான் பகுதிகளிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு S-400 ஸ்குவாட்ரனிலும் ஏவுதள வாகனங்கள், ரேடார் அலகுகள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தொழில்நுட்ப சப்போர்ட் வாகனங்கள் உள்ளிட்ட 16 வாகனங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த நவீன வான் பாதுகாப்பு அமைப்பு, 600 கி.மீ. தூரம் வரை வான்வழி அச்சுறுத்தல்களை கண்டறியும் திறன் கொண்டது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், மற்றும் டிரோன்களை வானிலேயே கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.














Click it and Unblock the Notifications