1001 நாட்கள் சிறை.. பிரஷர் கொடுத்த அமெரிக்கா.. சவுதி பெண் ஆர்வலர் விடுதலை
சவுதி: ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஆர்வலர் லூஜெய்ன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், சவுதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புடன் தொடர்பு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
வெளியில் இருந்து அழுத்தம்
லூஜெய்ன் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சவுதி அரேபியா அரசுக்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் சவுதி அரசு அதையும் பொருட்படுத்தவில்லை.
ஐந்தரை ஆண்டுகள் சிறை
ரியாத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் லூஜெய்ன் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அழுத்தம் கொடுத்த அமெரிக்கா
இந்நிலையில், நேற்று (பிப்.10) லூஜெய்ன் விடுதலை செய்யப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அமெரிக்கா கொடுத்த வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து லூஜெய்ன் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
1001 நாள் சிறை
லூஜெய்ன் வீட்டில் இருக்கிறார்!!! என்று ட்வீட் செய்துள்ள அவரது சகோதரி லினா, 1001 நாட்கள் சிறையில் இருந்த லூஜெய்ன் மகிழ்ச்சி ததும்ப சிரிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சிறையில் அடைத்திருக்கக் கூடாது
லூஜெய்ன் விடுதலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. "பெண்கள் உரிமைகள் மற்றும் பிற மனித உரிமைகளை ஊக்குவிப்பதும் அதற்காக வாதிடுவதும் ஒருபோதும் குற்றமாகாது. அவர் சிறையில் அடைப்பட்டிருக்கக் கூடாது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
லூஜெய்னுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சில பெண் ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் பல உரிமைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.