அடுத்த அதிர்ச்சி! மத்திய துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 1000 தாண்டும் உயிரிழப்பு
துருக்கி: இன்று காலை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் இன்று காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
இந்த மிகப் பெரிய நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது நிலநடுக்கம்
இந்தச் சூழலில் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் இப்போது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சிரியாவிலும் நிலநடுக்கம்
துருக்கி மட்டுமின்றி சிரியாவில் டமாஸ்கஸ், லதாகியா உள்ளிட்ட பகுதிகளிலும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இப்படி அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்தே அங்குள்ள பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், இப்போது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏன் ரொம்ப ஆபத்து
முதல் நிலநடுக்கத்திலேயே அங்குள்ள பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தச் சூழலில் இப்போது மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பலவீனமாக உள்ள கட்டிடங்களையும் கூட முழுவதுமாக தரைமட்டமாக்கும் ஆபத்து உள்ளது.

2800 கட்டிடங்கள் நாசம்
இதனால் அங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் தொடங்கிப் பல நகரங்களில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான கட்டிடங்கள் இல்லை. இதன் காரணமாகவே அப்படியே அங்குள்ள கட்டிடங்கள் சரிந்துள்ளன. துருக்கி நாட்டில் மட்டும் 2800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அப்படியே சரிந்துள்ளன.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இந்த இரண்டாவது நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. முதல் நிலநடுக்கத்திலேயே துருக்கியில் 900க்கும் மேற்பட்டோரும் சிரியா நாட்டில் சுமார் 300க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் காயமடைந்த பல ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications