பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 ராணுவத்தினரை சுட்டுக் கொன்ற ஆயுதக் குழுவினர்.. 13 தீவிரவாதிகள் கொலை!
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சிக் குழு, ரயிலை கடத்திய நிலையில் நடைபெற்ற தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினர், கிளர்ச்சிக் குழுவினர் மீது நடத்திய தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆயுதக் கிளர்ச்சிக் குழுவினர் நேற்று (செவ்வாய்கிழமை) கடத்தினர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் அமைப்பு பொறுப்பேற்றது.

9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், நேற்று க்வெட்டாவில் இருந்து பயணிகளுடன் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது சிலர் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் தடத்தில் இருந்து விலகியது. இதன் காரணமாக ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். அவர்களை கிளர்ச்சிப் படையினர் எச்சரித்துள்ளனர்.
அப்போது, ரயிலில் இருந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேரை கொன்றுள்ளதாக அந்த தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் வசம் சுமார் 214 பேர் பிணைக் கைதிகளாக உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. பாதுகாப்பு படையினர் தங்களை நெருங்கினால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
தங்களை தரை வழியாக ராணுவம் நெருங்க முடியாத சூழல் நிலவுவதாக பலூச் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் வான்வழியாக தங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை பாகிஸ்தான் அரசு இதுவரை வெளியிடவில்லை.
பலூச் விடுதலைப் படை (BLA) 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்தது. பாகிஸ்தான் இராணுவத்தால் கடத்தப்பட்ட பலூச் அரசியல் கைதிகள், ஆர்வலர்கள் மற்றும் காணாமல் போனவர்களை விடுவித்தால் பணயக்கைதிகளை விடுவிப்போம் என்றும், இராணுவத் தலையீடு தொடர்ந்தால், அனைத்து பணயக்கைதிகளும் கொல்லப்படுவார்கள் என்றும், ரயில் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் அந்த அமைப்பினர் எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் நடத்திய 13 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சுமார் 80 பயணிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 43 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் அடங்குவர் என்று ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications