அபுதாபி இந்திய தூதரகம் நடத்திய கருத்தரங்கு: என்.ஆர்.ஐ.க்களின் பிரச்சனை குறித்து ஆலோசனை
அபுதாபி: அபுதாபி இந்திய தூதரகம் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கடந்த 13ம் தேதி காலை முதல் மாலை வரை சோஷியல் மற்றும் கல்சுரல் சென்டரில் நடத்திய கருத்தரங்கில் பல்வேறு மாநில அரசு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கு அபுதாபி இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் தலைமை வகித்தார். துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கினை பிரபல தொழில் அதிபரும், லூலூ ஹைபர் மார்க்கெட் அதிபருமான எம்.ஏ. யூசுஃப் அலி தொடங்கி வைத்தார். மேலும் இந்தியர்களுக்கான வழிகாட்டி நூலினை அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரதமர் வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.
கோவா மாநில துணை முதல்வர் பிரான்ஸிஸ் டி சொஸா, வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் புரடக்டர் ஆஃப் இமிக்ரண்ட்ஸ் ஆர். புஹ்ரில், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச் தலைமை செயல் அலுவலர் சுதிர் குமார் ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய தூதரக சமூக நல கன்சுலர் ஆனந்த் பரதன், இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன், வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் புரடக்டர் ஆஃப் இமிக்ரண்ட்ஸ் ஆர். புஹ்ரில், அல் ஃபரா குரூப் தலைவர் ஜே.ஆர். கங்காரமணி ஆகியோர் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கோவா, ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் அரசு அலுவலர்கள் பங்கேற்று தங்களது மாநிலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
தமிழகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான முதன்மைச் செயலாளர் பி. ஆனந்த் பங்கேற்றார். அவர் வெளிநாடு வாழ் இந்திய தமிழர்களது நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விபரங்களை பட்டியலிட்டார்.
இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் கே. குமார், அஜ்மான் இந்தியன் அசோசியேஷன் தலைவர் ஓ.ஒய். அஹமது கான், அபுதாபி இந்திய சோஷியல் சென்டர் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் தங்களது அமைப்புகளின் சேவைகளை பட்டியலிட்டனர்.
அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியப் பிரதிகளின் சார்பில் இந்தியன் அசோசியேஷன், ஷார்ஜா, அஜ்மான், துபை ஈமான் கல்சுரல் சென்டரின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கும்பகோணம் சாதிக், துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டர் துபாய் மற்றும் அபுதாபி நிர்வாகிகள், தமிழ் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஒரு நாள் கருத்தரங்கு மூலம் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை தெரிவிக்கப்படும். இவற்றில் அமீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாது தாயகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அபுதாபி இந்திய தூதரகம் மற்றும் துபாய் இந்திய கன்சுலேட் ஆகியவற்றின் முயற்சியால் முதல் முறையாக இக்கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அபுதாபி இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்புற செய்திருந்தனர்.