நடுவானில் பயங்கரம்.. திடீரென குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்.. ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்
பாங்காக்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்தனர்.
பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமானங்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் மோசமான விபத்துகள் நடந்து விடுகின்றன.

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திடீரென தீவிரமான turbulenceஇல் சிக்கியது. இதனால் நடுவானத்தில் விமானம் தாறுமாறாகக் குலுங்கி இருக்கிறது. இதில் பலருக்கும் மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், எமர்ஜென்சி காரணமாக விமானம் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.. இருப்பினும், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 30 பேர் காயமடைந்ததுள்ளனர்.
எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
என்ன நடந்தது: 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் போயிங் 777-300ER ரக விமானம் தான் இந்த turbulenceஇல் சிக்கியுள்ளது. லண்டனில் புறப்பட்ட அந்த விமானம் சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. இருப்பினும், இந்த சம்பவத்தால் விமானம் அவசரமாக பாங்காக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாங்காக் ஏர்போர்ட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் உதவிகள் வழங்கி வருகிறோம். அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை அளிப்பதே எங்களுக்கு இப்போது முன்னுரிமை.. தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.
இரங்கல்: இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கள் விமானத்தில் இந்த சம்பவத்தில் ஒரு பயணி உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.. மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். நிலைமையைச் சமாளிக்க மேலும் ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்பி உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Turbulence என்பது சீரற்ற காற்று மூவ்மெண்ட் காரணமாக ஏற்படுகிறது. காற்று சுழல்கள், காற்று மூவ்மெண்ட் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. இதுபோன்ற பகுதிகளை விமானம் கடக்கும் போது அங்குக் காற்றின் மூவ்மெண்ட் ஏற்படுகிறது. பொதுவாக விமானம் செல்லும் போது turbulence ஏற்பட்டால் விமானம் லேசாகக் குலுங்கும். ஆனால், ரொம்பவே அரிதான நேரங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும்.
என்ன நடந்தது: பொதுவாக டர்புலன்ஸ் ஏற்பட்டால் பயணிகள் சீட் பெல்ட் அணியுமாறு பைலட் அறிவுறுத்துவார்.. டாய்லெட் உட்பட எங்கும் செல்லக்கூடாது. இருப்பினும், அதையும் மீறி பயணிகள் சீட் பெல்ட் அணியாதபோது தான் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் துல்லியமாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
ரேடாரில் டர்புலன்ஸ் குறித்த எச்சரிக்கை முன்கூட்டியே வராததால் விமானியால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பயணிகள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் டெல்லி-சிட்னி ஏர் இந்தியா விமானத்தில் இதேபோன்ற டர்புலன்ஸ் காரணமாகப் பல பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications