ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடூரம்: சிரிய வீரர்களைக் கொன்று கம்புகளில் தலையை சொருகி வைத்தனர்!
ரக்கா, சிரியா: ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், சிரியாவில் தாங்கள் பிடித்து வைத்துள்ள ரக்கா நகரில், தங்களால் கொல்லப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிரியா ராணுவ வீரர்களின் தலைகளை தனியாக கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் சொருகி வைத்துள்ள வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரிய ராணுவ தளத்திற்குள் புகுந்து இந்த வீரர்களை அவர்கள் கொலை செய்து தலைகளை மட்டும் தனியாக துண்டித்து கம்பங்களில் சொருகி வைத்துள்ளனர்.
ரக்கா என்ற நகரில் உள்ள சிரிய ராணுவ முகாமை இவர்கள் கைப்பற்றியபோது அங்கிருந்த 85 வீரர்களைக் கொலை செய்துள்ளனர். மேலும் 200 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அனேகமாக அவர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 50 வீரர்களைக் கொன்று அவர்களின் தலையை தீவிரவாதிகள் துண்டித்திருக்கலாம் என்று சிரியா மநித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
வீடியோ உண்மை
தீவிரவாதிகளின் இந்த அக்கிரமச் செயல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் பதைபதைக்க வைப்பதாக உள்ளது. இந்த வீடியோ உண்மையானதே என்று கூறப்படுகிறது.
கம்பங்களில் தொங்கும் தலைகள்
இந்த வீடியோவின் பின்னணியில் தீவிரவாதி ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது. தலைகளை தனித் தனியாக கம்பங்களில் சொருகி வைத்துள்ள காட்சியும் வருகிறது.
கருப்புக் கொடியுடன் தீவிரவாதி
ஒரு புகைப்படத்தில் சிரியாவில் கைப்பற்றிய கட்டடம் மீது தீவிரவாதி ஒருவர் கருப்புக் கொடியுடன் காட்சி தருகிறார்.
அதிபரின் படம் தீவைத்து எரிப்பு
இன்னொரு படத்தில் சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்தின் புகைப்படத்தை எரிக்கும் காட்சி உள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
வீரர்களின் தலைகளைக் கொய்து தனியாக கம்பங்களில் சொருகி வைத்துள்ள செயல் ரக்கா நகர மக்களுக்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
ஈராக் - சிரியாவை குறி வைத்து
ஈராக் மற்றும் சிரியாவை முழுமையாக கைப்பற்றி தங்களது இஸ்லாமியக் குடியரசை நிறுவும் வேலையில், இந்தத் தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர். இரு நாடுகளிலும் சில நகரங்களையும் கைப்பற்றி அங்கு ஏற்கனவே இஸ்லாமியக் குடியரசை அறிவித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இவர்களின் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர்.
ஏற்கனவே சிதிலமடைந்து போன சிரியா
சிரியாவில் ஏற்கனவே பெரும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 லட்சம் சிரிய மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து போயுள்ளனர்.