விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததால் பரபரப்பு... 241 பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 222 பயணிகளும், 19 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
சங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சித்தபோதுதான் இந்த தீவிபத்து நடந்தது. இருப்பினும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக இந்த விமானம் சிங்கப்பூரிலிருந்து மிலன் நகருக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்திதல் என்ஜின் ஆயில் டாங்க்கில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சங்கி விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டது. அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் விமானத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தீயை விமான பயணி லீ பீ யீ என்பவர் வீடியோவில் படமாக்கி அதை வெளியிட்டுள்ளார். விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கியுள்ளார். 49 விநாடி அந்த வீடியோ ஓடுகிறது. நான் செத்துப் பிழைத்துள்ளேன் என்று அவர் வர்ணித்துள்ளார்.