நிறைவேறாமல் போன ‘லீ’யின் கடைசி ஆசை…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 50வது ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே என்று அந்நாட்டு மக்கள் கண்ணீருடன் கூறிவருகின்றனர். தேசத்தந்தையின் மறைவுக்கு அவர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய லீ குவான் யூ. ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 50வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது பொன்விழா ஆண்டாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என லீ, தனது நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே முதுமை காரணமாக லீ குவான் யூ, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நியுமோனியாவினால் பாதிக்கப்பட்ட அவர் சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல் வெளியாகவே, நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டில் பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக லீ மரணமடைந்துள்ளதால், சிங்கப்பூர்வாசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
லீ யின் கடைசி ஆசையை அவர் உயிரோடு இருக்கும் போதே நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்று அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லீ குவான் யூவின் மறைவை ஒட்டி இரங்கல் அட்டைகளையும், மலர் கொத்துக்களையும் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லீ குவான் யூவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். லீ யின் மரணத்தை அடுத்து ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதால் சிங்கப்பூரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications