ஆஸ்திரேலிய மாலில் எலும்புக்கூடு திருட்டு... பஸ்ஸில் பப்ளிக்காக தூக்கிச் சென்ற திருடர்களைத் தேடும் போலீஸ்!
ஆஸ்திரேலியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூட்டைத் திருடிச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
கான்பரா: பொதுமக்கள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூட்டை தூக்கிக் கொண்டு மூன்று திருடர்கள் ஹாயாக தப்பிச் செல்லும் வீடியோ காட்சியினை வெளியிட்டு, துப்புக் கொடுக்கும்படி மக்களிடம் கேட்டுள்ளது ஆஸ்திரேலிய போலீஸ்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் அடிலாய்டில் உள்ள ரண்டில் என்ற பிரபல மால் ஒன்றில் எலும்புக்கூடு ஒன்று மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் திருடிச் சென்றது.
இது தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பந்தப்பட்ட மூன்று திருடர்களும் எலும்புக்கூட்டை, எதிலும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாகவே திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
வீடியோவில் சிக்கிய திருடர்கள்
தற்போது அந்தக் காட்சிகளைப் போலீசார் பொதுமக்கள் பார்வைக்காக தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் திருடர்கள் எலும்புக் கூட்டைத் தூக்கிக் கொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி படிக்கட்டுகளில் இறங்கி வெளியே செல்லும் காட்சிகள் உள்ளது.
பஸ்சில் தப்பினர்
அதோடு திருடர்கள் எலும்புக்கூட்டோடு பேருந்து ஒன்றில் ஏறிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஏதேனும் துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீசார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
காமெடி பதிவுகள்
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதற்குப் பதிலாக பல்வேறு நகைச்சுவையான கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். திருடப்பட்ட எலும்புக்கூடு பைபர் கிளாஸினால் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 200 டாலரில் இருந்து 500க்குள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 32 ஆயிரம் வரை ஆகும்.
நம்ம ஊர் மாதிரியே
நம்ம ஊரில் சமீபத்தில் பிணத்தை கடத்திச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எலும்புக் கூடு திருடர்கள் கான்பெராவில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.