"கொரோனாவை விட மோசமானது தாக்கலாம்.. சீனாவிடம் எச்சரிக்கை தேவை.." எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வாளர்
சியாட்டில்: அமெரிக்காவில் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சையைக் கடத்த முயன்றதாகச் சீன ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா கவனமாக இல்லையென்றால் கொரோனாவை விட மோசமான ஒன்றைச் சந்திக்க நேரிடும் என ஒரு பிரபல வல்லுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த யுன்கிங் ஜியான் (33) மற்றும் அவரது காதலன் சுன்யோங் லியு (34) ஆகியோர் 'ஃபியூசேரியம் கிராமினியாரம்' என்ற பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்டனர். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த பயிர்களை மொத்தமாகவே அழித்துவிடும்.

பூஞ்சை கடத்தல்
இந்த பூஞ்சையைக் கடத்தியதற்காக அமெரிக்காவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பூஞ்சையை விவசாய பயங்கரவாத ஆயுதம் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வகை பூஞ்சையால் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது பயிர்கள் மட்டுமின்றி, மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கும் கல்லீரல் பாதிப்பு மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
கைது செய்யப்பட்ட இந்த ஜோடி ஏற்கனவே சீனாவில் இந்த குறிப்பிட்ட பூஞ்சை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இதற்கிடையே சீன விவகாரங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவின் முன்னணி நிபுணர் கார்டன் ஜி சாங் இந்த விவகாரத்தில் அமெரிக்கா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வார்னிங் கொடுத்துள்ளார். இல்லையென்றால் கொரோனாவை விட மோசமான பாதிப்பை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எச்சரிக்கை
இது தொடர்பாக ஜி சாங் மேலும் கூறுகையில், "2019 மே மாதம், சீனாவின் மிகவும் அதிகாரப்பூர்வ நாளேடு அமெரிக்காவுக்கு எதிராகப் போரை அறிவிப்பது போன்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதுபோன்ற ஒரு கட்டுரையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நம் நாட்டைத் தாக்குவதற்கு அவர்களாகவே ஒரு காரணத்தைத் தேடிப் பிடிக்கிறார்கள். இந்தச் சூழலில் பூஞ்சை கடத்தலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
இது அமெரிக்கா மீதான தாக்குதல். ஜி ஜின்பிங் எப்போதும் போர் பற்றியே பேசுகிறார்.. அவர் சீன சமூகத்தையே போருக்கு அணி திரட்டுகிறார். நாம் நம் நாட்டை இழக்க நேரிடும்.. நாம் மிகவும் வலுவான நாடாக இருந்தும், தேவையான உறுதியுடன் நம்மைத் தற்காத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்
சீனாவின் முயற்சி
நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டில் சீனாவிடம் இருந்து விதைகளை வந்தது. அதாவது யாருமே ஆர்டர் செய்யவில்லை. ஆனாலும் விதைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் கூட சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி என்றே நினைக்கிறேன். டிமு என்ற ஆன்லைன் சீன ஆன்லைன் நிறுவனம் இந்தாண்டும் கூட அதுபோல செய்திருக்கிறது.
கொரோனாவை விட மோசமானது
இதையெல்லாம் நிறுத்த ஒரே வழி சீனாவுடனான உறவைத் துண்டிப்பதுதான். இது தீவிரமான நடவடிக்கை என்று மக்கள் கருதலாம். ஆனால் நாம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம். இதே நிலை தொடர்ந்தால் நாம் இறுதியில் தாக்கப்படுவோம். கொரோனா, இந்த பூஞ்சை மட்டுமில்லை.. நாம் கவனமாக இல்லாமல் போனால் இதையெல்லாம் விட மோசமான ஒன்றால் நாம் தாக்கப்படலாம்" என்று எச்சரித்தார்.
அதாவது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைத் துண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா கொரோனா வைரஸை விட மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்பதே ஜி சாங்கின் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பூஞ்சை கடத்தலில் இரு சீனர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரது எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications