1984 டெல்லி கலவரம்: வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி யு.எஸ். கோர்ட்டில் சோனியா அபிடவிட்
நியூயார்க் : டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் மூண்டதில் ஏராளமான பேர் பலியானார்கள்.
இந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக, அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் சார்பில் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுத் தொடரப்பட்டது.
தற்போது அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார் சோனியாகாந்தி.

நேரில் ஆஜராக வேண்டும்....
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும் படி சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், சோனியா ஆஜராகவில்லை.

நோட்டீஸ் அனுப்ப வேண்டும்....
அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ‘நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல், சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டும், அவர் கோர்ட்டில் ஆஜராகி தன் மீதான மனித உரிமை மீறல்கள் புகார்களுக்கு பதில் அளிக்க தவறிவிட்டார் என்றும், இதற்கான அவருக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விசாரிக்க இயலாது....
தனது சார்பில் ஆஜராக நியூயார்க்கில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றை சோனியா காந்தி நியமித்தார். சம்மன்னை அடுத்து சோனியா காந்தியின் சார்பில் கோர்ட்டில் ஆஜரான அந்த நிறுவனத்தின் வக்கீல் ரவி பத்ரா வாதாடுகையில்; ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்திக்கு கோர்ட்டின் சம்மன் வழங்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை இந்த கோர்ட்டு விசாரிக்க முடியாது' என்றும் வாதாடினார்.

திருத்தப்பட்ட மனுத்தாக்கல்...
ஆனால், ரவி பத்ராவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் சார்பில் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

சோனியா குற்றமற்றவர்....
இந்நிலையில் அந்த வழக்கையே தள்ளுபடி செய்யக் கோரி சோனியா சார்பில் 'அபிடவிட்' ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி சார்பில் நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடந்த சம்பவம் அந்நாட்டு நீதிமன்ற வரையறைக்குள் வரவில்லை என்றும் சோனியா காந்தி குற்றமற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications