ஸ்கேனில் தெரிந்ததோ 8தான்.. ஆனால் ரிலீஸானது 10 குழந்தைகள்.. உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோகோ சொடேட்ஸி. இவரது மனைவி கோஷியாமி தமாரா சித்தோல் (37). இவர்களுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சித்தோல் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.
கொரோனாவுடன் பிறந்த ஆண் குழந்தை.. ஸ்டீராய்டு, வென்டிலேட்டர் மூலம் போராடி உயிர் பிழைத்த நெகிழ்ச்சி
8 குழந்தைகள்
இவருக்கு ஸ்கேன் செய்த போது அவரது கர்ப்பப்பையில் 8 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் தம்பதியினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும் 8 குழந்தைகளும் எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்ற கவலையில் இருந்தனர்.
பிரிட்டோரியா நகர்
கடந்த 7-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 குழந்தைகள்
இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஸ்கேனில் 7 குழந்தைகள் இருந்த நிலையில் 2 எக்ஸ்ட்ராவாக பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கின்னஸ்
இதுதான் இப்போது உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனை விரைவில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என தெரிகிறது. சமூகவலைதளங்களில் தென்னாபிரிக்க பெண்ணுக்கு வாழ்த்துகளும் நலம் விசாரிப்புகளும் குவிகின்றன.