புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா.. எந்தளவு ஆபத்தானது? எவ்வளவு வேகமாக பரவுகிறது? பரபர தகவல்
ஜோகன்னஸ்பர்க்: புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரசஸ் லேசான நோய்ப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் இதர தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. தீவிர வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பை சில நாடுகள் மட்டுமே கட்டுக்குள் வைத்துள்ளன.
அதுவும் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரசை ஒழிப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக மாறியுள்ளது.

உருமாறிய கொரோனா
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா நாட்டில் முதலில் கண்டறியப்பட்டது. மற்ற உருமாறிய வைரஸ் வைரஸ்களை காட்டிலும் இதன் புரோத ஸ்பைக்கில் சுமார் 32 மாற்றங்கள் உள்ளது. இந்த புரோத ஸ்பைக் மூலம் தான் மனித செல்களை இந்த வைரஸ் பிடித்துக் கொள்கிறது. இந்த புதிய உருமாறிய கொரோனா அதிக ஆபத்தானது என்றும் மிக வேகமாகப் பரவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஓமைக்ரான் கொரோனா வகை
இந்த புதிய உருமாறிய கொரோனாவுக்கு ஓமைக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறுகையில், "இந்த புதிய உருமாறிய கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது. தசை வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் மட்டுமே இதனால் ஏற்படுகிறது. இந்த உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுவை அல்லது வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. நோயாளிகளுக்கு லேசான இருமல் ஏற்படுகிறது. அதைத் தாண்டி மற்ற அறிகுறிகள் இல்லை.

தீவிர ஆய்வு
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தற்போது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஓமைக்ரான் வைரசால் மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதியாகும் சூழல் ஏற்படவில்லை. வேக்சின் போட்ட நபர்களிடையே இந்த ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இது புதிய உருமாறிய கொரோனா. 2 வாரங்களுக்கு முன்பு தான் இந்த உருமாறிய கொரோனா முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

என்ன பாதிப்பு
இந்தச் சூழலில் இந்த உருமாறிய கொரோனாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என எங்களுக்குத் தெரியவில்லை. இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்குப் பின்னரே, இந்த உருமாறிய கொரோனா குறித்துக் கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். தற்போது வரை இந்த உருமாறிய கொரோனா 40 வயதுக்குள்ளானவர்களுக்கு மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் போதிய ஆதாரமில்லாமல் சில நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது சரியான முடிவில்லை" என்றார்.

உலக நாடுகள்
பல நாடுகளும் இப்போது தான் மெல்ல வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்குத் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருமாறிய கொரோனாவை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளைத் தான் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான ஏஞ்சலிக் கோட்ஸி சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications