மக்கள் கூட்டத்தில் பாய்ந்த ரேஸ் கார்! 8 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி.. இலங்கையில் பகீர் விபத்து
கொழும்பு: இலங்கையில் கார் பந்தயத்தின் போது அரங்கேறிய மிக மோசமான விபத்தில் 8 வயது சிறுமி உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கே பலரும் கார் என்றாலே பிடிக்கும். அதுவும் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஓடும் கார் ரேஸ்களுக்கு தனியாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமாக இருக்கிறார்கள். உலகெங்கும் பல்வேறு பெயர்களில் இந்த கார் ரேஸ் தொடர்ச்சியாக நடைபெறும்.

இந்த கார் ரேஸ்களின் போது மிகவும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும். இருப்பினும், அதையும் தாண்டி சில சமயம் விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு மிக மோசமான விபத்து தான் இலங்கையில் அரங்கேறியுள்ளது.
கார் விபத்து: ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024 என்ற கார் ரேஸ் இன்று பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்போது தான் மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து ஒட்டுமொத்த கார் ரேஸையும் சோகமானதாக மாற்றிவிட்டது. ரேஸில் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்த மக்களிடையே பாய்ந்தது.

இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவ என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடந்த போது முதலில் 6 பேர் உயிரிழந்தது உறுதியானது. படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மிக மோசம்: அவர்களில் ஒருவரது நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கார் ரேஸில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்தவர்கள். மேலும், இந்த விபத்தில் 8 வயது சிறுமியும் மரணமடைந்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
பலர் காயம்: கார் அதிவேகத்தில் மக்கள் கூட்டத்தில் பாய்ந்ததில் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மிக மோசமான விபத்தைத் தொடர்ந்து அந்த கார் பந்தயம் இப்போது தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications