போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வுடன் இணைந்து செயல்படத் தயார்... இலங்கை திடீர் அறிவிப்பு
ஜெனீவா : போர்க்குற்றம் குறித்தும், அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்கவும் ஐ.நா வுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக இலங்கை திடீரென அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.
அதில், போர்க்குற்றம் குறித்து சர்வதேச மற்றும், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணை தான் நடத்தப்படும் என்று கூறிவிட்டது.
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது இன்று பொது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிந்த ஆர்யாசின்ஹா, அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.