இலங்கை- தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்- பல கட்சிகள் புறக்கணிப்பு!
கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆயுதப் போராட்ட காலத்தில் இந்தியா தலையிட்டு தமிழருக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யக் கூடியதாக இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டு வந்தது. இந்த 13-வது திருத்தம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மத்திய அரசின் இலங்கை கொள்கையாக, 13-வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.
அண்மையில் இந்தியா வருகை தந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடமும் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே இலங்கையில் இன்று தமிழருக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூட்டியுள்ளார். தமிழருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய திட்டம் தம்மிடம் இருக்கிறது என ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருதார். இந்த நிலையில் இன்றைய அனைத்து கட்சிக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ரணில் கூட்டிய கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications