2018-க்குள் ராணுவம் வசம் உள்ள நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் - மங்கள சமரவீரா
ஜெனிவா: இலங்கையில் ராணுவம் வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள் 2018 ஆம் ஆண்டுக்குள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சயீத் அல் உசேன், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலங்கள் ராணுவம் வசம் இருப்பது கவலை அளிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் உள்ளதால் தமிழர்களிடையே அச்சம் நீடிக்கிறது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் நிர்வாக கட்டமைப்புகளை ஒழிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை உடனே அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கவலையை தீர்ப்பதுடன் பாதுகாப்புத் துறையையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதே கோரிக்கையை ஐரோப்பிய யூனியனும் முன்வைத்தது. மேலும், நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர் உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசின் நிர்வாகக்குழு தாமதப்படுத்துவதாக கூறுவது தவறு.
இலங்கை அரசின் நிர்வாகக்குழுவில் பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். சர்வேதேச சமூகத்துடன் இணைந்து செயல்படவே இலங்கை விருப்புகிறது. விருப்பம் உள்ள யாரும் இலங்கைக்கு வந்து நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்யலாம். ராணுவம் வசம் உள்ள நிலங்கள் 2018-க்குள் தமிழர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்று சமரவீரா குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications