Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பியடித்த பாலஸ்தீன்.. திக்குமுக்காடிய இஸ்ரேல்! பல்லாண்டு போரின் ரத்த சரிதம் - இதான் வரலாறு

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: பாலஸ்தீன் எல்லைக்கு உட்பட்ட காசா பகுதியில் இருந்து 2000 க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டு இருக்கும் நிலையில், போர் நிலையை அந்நாடு அறிவித்து இருக்கிறது. பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையிலான போருக்கு என்ன காரணம்? விரிவாக பார்ப்போம்.

மத பின்னணி: பாலஸ்தீனில் உள்ள ஜெருசலேம் பகுதி இஸ்லாம், கிறிஸ்துவம், யூதம் என மூன்று மதங்களுக்கும் புனித நகரமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் யூதர்களால் கடவுளாகவும், தூதராகவும் பார்க்கப்படும் மூசா எனப்படும் மோசஸை கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இறைவனின் தூதரர்களாக பார்க்கிறார்கள். அவர்களின் மூதாதையரான சுலைமான் எனப்படும் சாலமன் கட்டிய அக்சா எனப்படும் வழிபாட்டு தலத்தை மும்மதங்களை சேர்ந்தவர்களும் புனித தலமாக போற்றுகிறார்கள்.

 State of War - History behind the war between Palenstine and Isreal

முஹம்மது நபி வருகைக்கு பிறகு பாலஸ்தீன் முழுவதும் இஸ்லாம் பரவியது. மற்ற அரபு நாடுகளைபோல் பாலஸ்தீனிலும் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களே வாழ்ந்து வருகிறாகள். முஸ்லிம்கள் முதலில் அக்சாவின் திசை நோக்கியே தொழுது வந்தனர். அந்த அளவுக்கு அது முக்கியத்துவம் பெற்றது. முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் துருக்கி உதுமானிய பேரரசிடம் இருந்து பாலஸ்தீனை கைப்பற்றியது பிரிட்டன். ஹிட்லரின் அராஜகத்தால் ஜெர்மனியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட சமயத்தில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர்.

யூத அகதிகள்: நாடற்றவர்களாக தென் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்ற யூதர்கள் பாலஸ்தீனை நோக்கியும் வந்தனர். அந்த சமயத்தில் யூதர்களுக்கு என்று தனி தேசத்தை அமைக்கும் பொறுப்பை பிரிட்டனுக்கு உலக நாடுகள் அளித்தன. இதற்காக ஏற்கனவே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பாலஸ்தீனை தேர்வு செய்தது பிரிட்டன். யூதர்களின் இயலாமையை புரிந்து பாலஸ்தீன் மக்களும் தொடக்கத்தில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் யூதர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த காரணத்தால் இரு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில்தான், 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாக பிரித்து யூதர் மற்றும் அரபு பகுதி என ஐநா உருவாக்கியது. இதற்கு யூதர்கள் ஒப்புக்கொண்டாலும், தங்களின் நாட்டை வேறு நாட்டில் இருந்து வந்தவர்களுக்காக எப்படி பிரிக்க முடியும் என பாலஸ்தீன் மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட முடியாமல் பிரிட்டன் ஆட்சியாளர்களே 1948 ஆம் ஆண்டு வெளியேறினர்.

இஸ்ரேல் உதயம்: உடனே யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதாக அறிவித்தனர். ஆனால், இதற்கு எதிராக பாலஸ்தீன் போர்க்கொடி தூக்கியது. இஸ்ரேல் நாடாக அறிவித்த பகுதிகளை விட்டு பாலஸ்தீனர்களை யூத படைகள் விரட்டியடித்தன. இஸ்ரேல் என்ற நாட்டை அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல மாதங்கள் போர் நடந்தன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்தன. பாலஸ்தீனுக்கு அரபு நாடுகள், எகிப்து, லிபியா போன்ற நாடுகளின் ஆதரவு இருந்தது.

ஆனாலும் இஸ்ரேல் மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் வலுவடைந்துகொண்டே சென்றது. போர் நின்றவுடன் பாலஸ்தீனின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக பாலஸ்தீனை அண்டை நாடுகளும் தங்கள் பங்கிற்கு கூறுபோட்டு பிரிக்க, உலக வரைபடத்திலேயே தெரியாத அளவுக்கு பாலஸ்தீன் எல்லைகள் சுருங்கின. இந்த நிலையில், மீதம் இருக்கும் பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை பகுதிகளையும் ஆக்கிரமிக்க முயன்று வருகிறது இஸ்ரேல்.

தொடர் தாக்குதல்: இதற்காக பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் தொழுகைக்கு செல்லும் பாலஸ்தீன் மக்கள் மீது போலீஸ், ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

குறிப்பாக இஸ்ரேல் தலைநகராக டெல் அவிவ் உள்ள நிலையில், பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான நகரமாக இருக்கும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் முயற்சியை அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுத்த முயன்று வருகிறது இஸ்ரேல். பாலஸ்தீன் வசம் இருக்கும் குறைவான பகுதிகளையும் கைப்பற்ற அங்குள்ளவர்கள் மீது கொடூர தாக்குதல்களை இஸ்ரேல் தினந்தோறும் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்குள்ள ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.

பொருளாதார பின்னணி: இந்த ஹமாஸ் குழுவை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்து தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது இரு நாடுகள் இடையே அமைதி திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், அது இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளது என பாலஸ்தீன் தெரிவித்தது. இஸ்ரேலோ நூற்றாண்டு ஒப்பந்தம் என போற்றியது. பல தசாப்தங்களாக இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்துக்கொள்ளாமல் இருந்த அரபு நாடுகள் தற்போது, வர்த்தகம் சுற்றுலா போன்ற காரணங்களால் இஸ்ரேலுடனான தூதரக உறவுக்கு சில ஆண்டுகளாக ஒப்புக்கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

ஆனால், இந்த அதிகார போட்டியால் அங்கு வாழும் மக்கள் தினம் தினம் மரண வலியை அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். வரலாற்று பின்னணியோடு அணுகும்போது இதில் மதமும், நில உரிமையும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிந்தாலும், பாலஸ்தீன் அமைந்து இருக்கும் பகுதி என்பது உலகின் அதிகளவிலான வர்த்தக கப்பல்கள் சென்று வரும் கடற்பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ள நிலப்பரப்பு என்பதால் பொருளாதார ரீதியாகவும் இதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது மேற்கத்திய நாடுகளின் நோக்கமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+