ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 வீடுகள் தரைமட்டம், 39 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இரண்டு கிராமங்களில் 37 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 39 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடமேற்கு பகுதியில் உள்ள நாகனோ நகர் அருகே சனிக்கிழமை இரவு 10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 1998ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த ஹகுபா நகரில் 30 வீடுகளும், ஒடாரி கிராமத்தில் 7 வீடுகளும் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுகத்தால் மொத்தம் 39 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணியில் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்
நிலநடுக்கத்தையடுத்து ஹகுபா மற்றும் ஒடாரி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணு உலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 9 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், சுனாமியால் 18 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் புகுஷிமா அணு உலையிலும் பிரச்சனை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.