ஈராக்கில் மேலும் ஒரு நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியது!
பாக்தாத்: ஈராக்கில் குர்திஷ் இனமக்கள் வசம் இருந்த சிஞ்சார் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது.
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நகரமான மொசூல் நகரை கடந்த மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து மேலும் பல நகரங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியது.
சிரியா, ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடந்த ஒரு மாத காலமாக குர்திஷ் படைகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் போரை நடத்தி வந்தது.
தற்போது சிரியா- ஈராக் எல்லைப் பகுதியில் மொசூலை ஒட்டியுள்ள சிஞ்சார் நகரையும் குர்ஷித் இன மக்களிடம் இருந்து கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்.
சிஞ்சார் நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் மீது தங்களது இயக்கத்தின் கருப்பு கொடியை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பறக்க விட்டுள்ளனர். இதேபோல் ஈராக்கின் மிகப் பெரிய மொசூல் அணை மற்றும் சில சிறு நகரங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.