பள்ளிக்குள் இறங்கிய கொடூரன்.. தாறுமாறாக துப்பாக்கி சூடு! ஸ்வீடன் நாட்டில் 10 பேர் பலி, பலர் படுகாயம்
ஸ்வீடன்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. அங்குப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்ணில்பட்ட அனைவரையும் தாறுமாறாகச் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் பலரும் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்கக் கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை. இதனால் அங்கு சாதாரணமாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறும். இதைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் பெரியளவில் பலன் இல்லை.

அதேநேரம் ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கியை வாங்கப் பல கட்டுப்பாடுகள் இருக்கும். இதனால் ஒப்பீட்டளவில் அங்கு மோசமான சம்பவங்கள் பெரிதாக நடைபெறாது. இருப்பினும், அதையும் தாண்டி சில சமயம் மோசமான சம்பவங்கள் நடந்துவிடும்.
ஸ்வீடன் துப்பாக்கிச் சூடு:
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் நடந்துள்ளது. அங்கு மத்திய ஸ்வீடனில் உள்ள கல்வி மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
போலீஸ் சொல்வது என்ன
ஸ்வீடன் நாட்டின் வரலாற்றில் பள்ளியில் இதுவரை இப்படியொரு மோசமான தாக்குதல் நடந்ததே இல்லை என்று ஸ்வீடன் போலீசார் கூறுகிறார்கள். போலீஸ் துறைத் தலைவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது" என்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்.. காயமடைந்தோர் யார்.. அவர்களின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று எந்தவொரு தகவலையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை. அதேபோல இதில் கொல்லப்பட்டது மாணவர்களா இல்லை ஆசிரியர்களா என்ற தகவலைக் கூட போலீசார் வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்:
திடீரென பள்ளிக்கூட வளாகத்தில் நுழைந்த அந்த நபர் தாறுமாறாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். கண்ணால் கண்ட அனைவரையும் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இறுதியில் அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அதை அந்நாட்டு போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
போலீஸ் துறைத் தலைவர் மேலும் கூறுகையில், "இது ஒரு பயங்கரமான நிகழ்வு. ஸ்வீடனில் இதுபோல நடப்பது அரிதானது. இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவருக்கு கேங் உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை. இது தனித்த தாக்குதல் போலவே தெரிகிறது. வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications