விஸ்கியில் தண்ணீரை கலந்தால் ஏன் சுவைக்கிறது? ஆராய்ச்சியில் குதித்த ஆய்வாளர்கள்!
விஸ்கியில் தண்ணீர் கலந்தால் ஏன் அது அதிகம் சுவைக்கிறது என்று 'அத்தியாவசியமான' ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள்.
ஸ்டாக்ஹோம்: மது பிரியர்களுக்கு உற்சாகம் தரும் விஸ்கி, ஏன் தண்ணீருடன் கலந்து குடித்தால் சுவை அதிகரித்து கிறுகிறுக்க வைப்பது ஏன் உற்சாக ஆராய்ச்சியில் இறங்கினர் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள். அதில் பல சுவாரஸ்ய முடிவுகள் கிடைத்துள்ளன.
'Dilution of whisky - the molecular perspective' என்ற தலைப்பில் சுவீடன் பல்கலைக்கழக ஆய்வாளர்களான பிஜோர்ன் கார்ல்சன், ரான் பிரைட் மான் ஆகிய இருவரும் ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் செய்த ஆய்வில் விஸ்கியுடன் தண்ணீரைக் கலப்பதால் சுவை கூடுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

சுவைக்கு முக்கியக் காரணம் விஸ்கியில் உள்ள பினால் என்ற 'மூலக்கூறு' தண்ணீருடன் சேரும் போது அது வித்தியாசமான சுவை அளிக்கிறதாம். தண்ணீரின் மூலக்கூறான H-2 o பினாலுடன் சேரும்போது அதிக சுவை உருவாகிறது. அதனால் விஸ்கியுடன் சிறிய அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு, ராவாக குடிக்க நினைக்கும் நபர்களுக்கு வலியுறுத்துகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரிஷ் நாடுகளில் கிடைக்கும் விஸ்கியைவிட ஸ்கார்ட்லாந்தில் கிடைக்கும் விஸ்கிக்கு தனி சுவை உள்ளதாம். அதற்கு காரணம் தண்ணீர்தானாம்.
பார்லி தானியத்தை பல நாட்கள் புளிக்க வைத்து , அதிலிருந்துதான் விஸ்கி தயாரிக்கப்படுகிறது. அப்படி புளிக்க வைக்கும்போது 90 சதவீதம் விஸ்கியில் ஆல்கஹாலின் அளவு இருக்கும் .இதை 40 சதவீதமாக்க தண்ணீர் கலக்கப்படுகிறது. இதனால்தான் விஸ்கி சுவைக்கிறது.
பிரிட்டனில் போர் நடக்கும்போது, குடிப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் இல்லாத நிலையில், குடிநீர் பஞ்சத்தைப் போக்க, நீருடன் விஸ்கியை கலந்து குடிக்குமாறு வின்ஸ்டன் சர்ச்சில் ராணுவ வீரர்களுக்கு கூறியிருக்கிறார்.
இதுபோன்ற பல வரலாற்று குறிப்புகளையும் இந்த சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தங்களது ஆய்வு முடிவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications