வங்கதேச விவகாரம்.. புதிய தலைமை நீதிபதி சையது ரெஃபாத் பதவியேற்பு
டாக்கா: வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா உடனே வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ரெஹானாவும் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்து, கிறிஸ்துவ, புத்த உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் வன்முறையைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. வங்கதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு முகமது யூனிஸ் தலைமை வகித்துள்ளார். இதையடுத்து, ஆட்சி கவிழ்ந்த ஆறே நாட்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் (65) பதவி விலகினார். இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வங்கதேச அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சையது ரெஃபாத் அகமது புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதிக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவியேற்பு விழாவை அமைச்சரவை செயலர் மஹ்பூப் ஹூசைன் நடத்தினார் என்று பிரபல செய்தித்தாளில் செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications