சிரியா: ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 25 பேர் பலி
பெய்ரூட்: சிரியாவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் 14 பேர் உட்பட 25 பேர் பலியானதாக மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அரசியல் நடத்தி வருவதாகக் கூறி, சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி ஏராளமானோரைப் பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவ வீரர்களும் பதில்த் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இடைவிடாத போரினால் உருக்குலைந்த நகரமான அலெப்போ காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், நேற்று அலெப்போ நகரில் புரட்சியாளர்கள் நிறைந்த பகுதி ஒன்றில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சிக்கி 25 பேர் பலியாகினர் என்றும் அவர்களுள் 14 பேர் சிறுவர்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது சிரியாவில் உள்ள மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம்.

சிரியாவின் பொருளாதார மையமாக ஒரு காலத்தில் விளங்கிய அலெப்போவில் பலமுறை ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நடந்ததாக ஊடக நிலையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் சுற்றியிருந்த பல பகுதிகளிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி அழிவை ஏற்படுத்தியதாக இவற்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications