ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாண தலைநகரான குந்தூஸை தாலிபான்கள் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை குந்தூஸ் நகருக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கினர். மேலும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதினர்.

2001ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தாலிபான்கள் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளனர். மதிய வேளையில் அவர்கள் உளவுத் துறையின் தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் ஐ.நா. கட்டிடங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் குந்தூஸ் நகரில் உள்ள சிறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே அரசு அதிகாரிகள் பலர் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் என்.ஜி.ஓ. ஆட்களுடன் நகரை விட்டு தப்பியோடிவிட்டனர். அதிகாலை 3 மணியில் இருந்து துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குந்தூஸில் தற்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 40 பொதுமக்கள் உள்பட 95 பேர் பலியாகியுள்ளனர். தெருக்களில் பிணங்களாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தாலிபான்கள் மேற்கில் உள்ள சர்தாரா, தென்-மேற்கில் ஆலியாபாத், கிழக்கில் கானாபாத் மற்றும் வடக்கில் இமாம் சாஹெப் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து தாக்குதல்களை துவங்கியுள்ளனர்.
அஸ்ரப் கனி ஆப்கானிஸ்தான் அதிபராக பதவியேற்று ஓராண்டு முடிவதற்கு முந்தைய நாள் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications