பாகிஸ்தானில் 23 எல்லை பாதுகாப்பு படையினர் தலையை வெட்டிய தலிபான்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 பேரை தலையை வெட்டிக் கொன்றுவிட்டதாக தாலிபான் தீவீரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தாலிபான்களின் பிரிவான முகமது ஏஜென்சி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தாங்கள் கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 பேரை தலையை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் அந்த 23 பேரை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை விரைவில் வெளியிடுவதாக முகமது ஏஜென்சி தெரிவித்துள்ளது. இது உண்மையாக இருப்பின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
முகமது ஏஜென்சி அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த எதிராக உள்ளது என்று நம்பப்படுகிறது. முன்னதாக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிக்க தாலிபான்கள் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.