ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் சகோதரர்.. கொடூர சித்திரவதைக்கு பின் கொலை.. தொடரும் தாலிபான் அட்டூழியம்
காபூல்: ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோகுல்லா சலேவை தாலிபான்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மளமளவென ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு முன், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியே தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். இன்னும் ஒரிரூ நாட்களில் தாலிபான் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை அதிபர் அம்ருல்லா சாலே
தாலிபான்கள் காபூலை கைப்பற்றும் முன்னரே, அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார். அந்த சமயத்தில் ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கன் அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார். மேலும், தாலிபான்களின் அரசை ஏற்க முடியாது என வெளிப்படையாக அறிவித்த அவர், பஞ்ச்சீர் மாகாணத்தில் கிளர்ச்சிப் படையுடன் இணைந்து தாலிபான்களுக்கு எதிராகச் சண்டையிடத் தொடங்கினார்.

பஞ்ச்சீர் மாகாணம்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தாலிபான்கள் பஞ்ச்சீர் மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கு எதிராகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். கிளர்ச்சி படையினரைத் தோற்கடித்து, பஞ்ச்சீர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகத் தாலிபான்கள் அறிவித்தனர். அதேநேரம் இதை மறுத்த கிளர்ச்சி படையினர், தாலிபான்களுக்கு எதிராகச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோகுல்லா சாலேவை தாலிபான்கள் கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

ரோகுல்லா சலே கொலை
பஞ்ச்சீர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையின் போது ரோகுல்லா சாலேவை தாலிபான்கள் சிறை பிடித்துள்ளனர். அப்போது அவரை தாலிபான்கள் கொடூரமாக கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொடூரமான சித்திரவதைக்குப் பின்னர் ரோகுல்லா சாலேவை தாலிபான்கள் தூக்கிலிட்டதாக அவரது உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். நேற்றைய தினம் ரோகுல்லா சாலேவை தாலிபான்கள் கொலை செய்ததாகத் தெரிவித்த அவர், அவரது உடல்க் கூட அடக்கம் செய்யவிடவில்லை என்றும் உடல் அழுக வேண்டும் என வைத்துள்ளனர் என்றும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்குப் பின் கொலை
பஞ்ச்ஷீர் பகுதியில் நடைபெற்ற மோதலில் ரகுலா சாலே கொல்லப்பட்டதாகத் தாலிபான்களின் தகவல் சேவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ரப் கானி தலைமையில் இருந்த ஆப்கன் அரசில் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக இருந்தவர் ரகுலா சாலே. இவரைத் தான் இப்போது தாலிபான்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ரோகுல்லா சாலேவின் உடலை உறவினர்களிடம் அளிக்க மறுத்த தாலிபான்கள் அவரது உடல் அழுக வேண்டும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

புதிய அரசு
அதேநேரம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் புதிய ஆட்சியை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இடைக்கால அரசு அமைக்க ஏதுவாக புதிய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. சில சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் அமைச்சரவையில் இடம் இருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இன்று ஆப்கனில் புதிய அரசு அமையும் என்றும் செய்தி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் புதிய அரசை அமைக்கும் திட்டத்தைத் தாலிபான்கள் கைவிட்டுள்ளதாகவும் வேறொரு நாளில் புதிய அரசு பதவியேற்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications