ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் - 24 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் 2 சோதனைச் சாவடிகள் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 போலீசார் உயிரிழந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 சோதனைச் சாவடிகள் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 போலீசார் உயிரிழந்தனர். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் பணியில் உள்நாட்டு படைகளும் அமெரிக்க கூட்டுப்படைகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள லஸ்கர்கா நகரில், சோதனைசாவடி ஒன்றின்மீது தாலிபன் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை துப்பாக்கிகளையும், கையெறிகுண்டுகளையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 போலீசார் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தீவிரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். சோதனைச்சாவடி தரப்பில் இருந்து ஒருவர் தாலீபன் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தாக கூறப்படுகிறது.
இதேபோல் அங்குள்ள மர்ஜா மாவட்டத்தில் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.