ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு இல்லை... மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதி நிலவுவதையே விரும்புவதாகவும் மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். மேலும் அதிபராக இருந்த அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை அதிபர் சலேவும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமைச்சர் அகமது ஜலாலி தலைமையில் இடைக்கால அரசு அமையும் என கூறப்பட்டது. ஆனால் இதனை தலிபான்கள் ஏற்பார்களா என தெரியவில்லை என செய்திகள் கூறின. இந்த நிலையில் இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

காபூலுக்குள் தலிபான்கள்
அதில் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டனர். எங்களது நோக்கமே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான். அங்குள்ள வளத்தை கொள்ளையடிப்பது எங்கள் நோக்கமல்ல. அது போல் இடைக்கால அரசு அமையும் என கூறுவது எல்லாம் வதந்திகள்,இடைக்கால அரசை அலி அகமது ஜலாலி ஏற்று நடத்துவார் என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே எல்லாமே வதந்திதான்.

ஆப்கனில் அமையும் ஆட்சி
ஆப்கனில் அமையும் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என நிறைய யூகங்கள் வலம் வந்தன. இதுகுறித்து இன்னும் எங்கள் இயக்கம் முடிவு செய்யவில்லை. யார் எந்த துறையை ஏற்று நடத்துவார்கள் என்றும் தெரியவில்லை. தலிபான்களின் துணை கமாண்டராக உள்ள முல்லா அப்துல் கானி பராதார் (எ) முல்லா பராதார் அக்குந்த் அதிபராக வாய்ப்பு என பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இஸ்லாமிய சட்டம்
நாங்கள் இஸ்லாமிய இயக்கம் என்பதால் நாங்கள் அமைக்கும் அரசும் இஸ்லாமிய ஷரியா (ஷரியத்) சட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவே விரும்புகிறோம். முன்பு இருந்த அரசியல் தலைவர்களை பழி வாங்கும் நோக்கமில்லை. நல்லாட்சியை நடத்துவோம். எங்களை பார்த்து யாரும் அச்சமடைய தேவையில்லை. யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை. நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம். முஜாஹிதீன்கள் காபூலில் நுழைந்ததே அமைதியை ஏற்படுத்தத்தானே தவிர யாரையும் துன்புறுத்த அல்ல.

ஆப்கானிஸ்தான் வளர்ச்சி
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். எனவே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் நாடு திரும்புங்கள். ஷரியா (ஷரியத்) சட்டம் மற்றும் விதிகளின் படி பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும். மாணவர்களும் படிக்க அனுமதிக்கப்படுவர். ஆப்கானிஸ்தானில் நல்ல கல்வி தேவை. தூதரகங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அவர்களுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறோம். உலக நாடுகளுடன் ஒன்றி வாழ ஆப்கானிஸ்தான் விரும்புகிறது.

பாதுகாப்போம் என உறுதி
அவர்களை நாங்கள் பாதுகாப்போம் என உறுதியளிக்கிறேன். மற்ற நாடுகளுடனுடன் நல்லுறவை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது அவர்களுடைய பிரச்சினை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை. ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுடனும் நல்லுறவு காட்ட விரும்புகிறது. பாகிஸ்தான் எங்கள் அண்டை நாடு. எங்களில் பலருக்கு அது இரண்டாவது தாய் நாடு. பாகிஸ்தானில் நிறைய ஆப்கானியர்கள் வசித்து வருகிறார்கள் என்றார் அவர்.
Recommended Video

எந்த இடையூறும் ஏற்படுத்த மாட்டோம்
மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த மாட்டோம் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறினாலும் மக்கள் விமான நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு பல இடங்களில் மக்கள் கூட்டம் உள்ளது. தங்கள் எந்த நாட்டின் விமானங்களாவது அழைத்து செல்லாதா என காத்துக் கிடக்கிறார்கள். தலிபான்கள் மீதான அச்சத்தை அடுத்து வெளிநாடுகளில் தஞ்சமடைய காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடிய மக்களால் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications