ஈரான் மாடலை கையில் எடுத்தது தாலிபான்.. கந்தஹாரில் கால்பதித்த அகுண்ட்சாடா.. பிடனுக்கு பெரிய சிக்கல்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற்று இருக்கும் தாலிபான் அங்கு ஈரான் மாடல் ஆட்சியை செய்ய உள்ளது. ஈரானுக்கும் தாலிபானுக்கும் நட்பு இல்லாத நிலையில், ஈரான் நாட்டின் அதே ஸ்டைல் ஆட்சி முறையை தாலிபான் கையில் எடுத்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியேறிவிட்ட நிலையில் அங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளது. அதிகபட்சம் இன்னும் இரண்டு நாட்களில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரபூர்வ ஆட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்டில் ஆட்சி எப்படி இருக்கும், யாருக்கும் அதிக சக்தி இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டப்படியே தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்த நிலையில்தான் தாலிபான்கள் ஈரான் மாடல் ஆட்சி முறையை ஆப்கானிஸ்தானில் நடத்த உள்ளது. அதாவது குடியரசு ஆட்சி முறையும், ஷரியத் சட்டங்கள் கொண்ட ஆட்சி முறையும் கலந்த கலவை ஆகும்.

ஈரான்
ஈரான் மாடல் ஆட்சி என்பது அங்கு மதம் மற்றும் அரசு இரண்டுக்கும் சுப்ரீம் லீடர் எனப்படும் உச்சபட்ச தலைவர்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார். இவருக்கு கீழ் சில உறுப்பினர்கள் கொண்ட கவுன்சில் இருக்கும்.. சுப்ரீம் லீடர் எடுக்கும் முடிவை இந்த கவுன்சில் செயலுக்கு கொண்டு வரும். நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் மற்ற நிர்வாக பணிகளை கவனித்துக் கொள்வார். பிரதமர் அல்லது அதிபருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருந்தாலும் அதிகபட்ச அதிகாரம் சுப்ரீம் லீடருக்கே இருக்கும். நாட்டின் மத தலைவராகவும் இவர் மதிக்கப்படுவார்.

முக்கியம்
இதே ஈரான் மாடலைத்தான் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கொண்டு வர உள்ளனர். அங்கு நாட்டின் சுப்ரீம் லீடராக ஹிபாதுல்லா அகுண்ட்சாடா பதவி ஏற்க இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலுக்கு பதிலாக கந்தகாரில் இருந்து இவர் நாட்டின் ஆட்சி அதிகாரங்களை கவனித்துக் கொள்வார். கந்தகாரில் அவர் ஏற்கனவே இதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். இவருக்கு கீழ் 11 முதல் 72 கவுன்சில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமர் காபூலில் தங்கி அங்கு இருந்து மற்ற நிர்வாக பணிகளை கவனிப்பார். அங்கு அமைச்சர்கள் குறைவாகவே இருப்பார்கள். கவுன்சில் உறுப்பினர்களே முக்கிய பணிகளை கவனிப்பார்கள். பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அப்துல் காணி பராதர் அல்லது முல்லா பராதர் அல்லது முல்லா யாகூப் ஆகியோரில் ஒருவர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் இந்த திட்டம் ஒருவகையில் அந்த நாட்டை அருகில் இருக்கும் ஈரான் நாட்டுடன் கொஞ்சம் நெருக்கமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான்
ஈரானுக்கும் தாலிபானுக்கும் தொடக்க காலத்தில் உறவு சரியாக இருந்தது இல்லை. சன்னி பெரும்பான்மை கொண்ட தாலிபான்களின் 1996 ஆட்சியின் போது ஆப்கானில் ஷியா மக்கள் மோசமாக நடத்தப்பட்டனர். ஈரான் ஷியா நாடு. இதனால் ஈரான் அதிகாரிகள் 1998ல் தாலிபான்கள் மூலம் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் தாலிபானுடன் போருக்கு செல்லும் நிலை கூட ஏற்பட்டது. ஈரான் படைகளும் கூட 2001ல் நடந்த அமெரிக்க தாலிபான் போரில் நார்தன் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு தாலிபான்களை எதிர்த்தது. தொடக்கத்தில் தாலிபான் ஈரான் இடையே கடும் மோதல் இருந்தது.

ஆனால் மாற்றம்
ஆனால் கடந்த 20 வருட போரில் அமெரிக்கா மீது இருக்கும் கோபத்தால் ஈரான் கொஞ்சம் தாலிபான்களுக்கு நெருக்கம் ஆகியுள்ளது. தாலிபான்கள் ஈரான் எல்லை பகுதியில் வளர்ச்சி அடைய ஈரானின் மறைமுக உதவியும் காரணம் என்றே கூறப்படுகிறது. ஈரான் இதை மறுத்து வந்தாலும்.. அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தாலிபானும் ஈரானும் இணையும் என்றே சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இப்போதும் ஷியாவிற்கு எதிரான மனப்பான்மையில் தாலிபான் இருப்பதால் ஈரான் - தாலிபான் நட்பு உண்மையில் சாத்தியமாகுமா என்பது சந்தேகம்தான்.

என்ன நடக்கும்
ஈரான் தாலிபான் இடையிலான உறவில் என்ன நடந்தாலும் அது அமெரிக்க அதிபர் பிடனுக்கும் அமெரிக்காவிற்கும் சிக்கலைதான் ஏற்படுத்த போகிறது. ஈரானும் தாலிபானும் நட்பாக மாறினால் அது சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் போர்களில் அமெரிக்காவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும். அப்படி இல்லாமல் ஒருவேளை ஈரானும் தாலிபானும் மோதலில் ஈடுபட்டால் அதிலும் மூக்கை நுழைக்க முடியாமல், ஆசியாவில் தனது கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அமெரிக்காவிற்கு ஏற்படும்.

சிக்கல்
இரண்டில் எது நடந்தாலும் அமெரிக்காவிற்கு இதனால் சிக்கலே ஏற்படும். ஆப்கானிஸ்தானில் இனி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அமெரிக்காவை ஒருவகையில் பாதிக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு அங்கு தாலிபான்களின் பதவி ஏற்பு விழாவிற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பதவி ஏற்க உள்ளனர். இது ஒருவகையில் அமெரிக்காவின் "பெரிய அண்ணன்" குணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications