ஏழை தமிழ் மாணவ, மாணவியருக்கு உதவ துபாயில் நடந்த ஆலோசனை கூட்டம்
துபாய்: துபாய் அல் கிசஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் உள் அரங்கில் கல்வி விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் ஹபீபுல்லாஹ் தலைமை வகித்தார். துபாய் பவர் குரூப் சேர்மன் ஹுசைன், திருச்சி பைசுர் ரஹ்மான், முதுவை ஹிதாயத்துல்லா, கீழக்கரை ஹமீது யாசின், இக்பால், பூதமங்கலம் முஹைதீன், ஜாபர் சாதிக், ரஹ்மத்துல்லா, திருநெல்வேலி முஹைதீன், ஜமால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்துல்லா ஷாபி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பைசுர் ரஹ்மான் கல்வி விழிப்புணர்வு குறித்து எத்தகைய பணிகளை மேற்கொள்வது என விவரித்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் நலிவடைந்த மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும், அரசு பணிகளுக்கு மாணவ, மாணவிகளை தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு கல்விக்கான நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது.
முதல் கட்டமாக இதற்கான திட்டத்தை தயார் செய்து தமிழகத்தில் சமூக நல தன்னார்வலர்வலர்களை அடையாளம் காண்பது, பின்னர் இப்பணிகளை மேற்கொள்ள தேவையான கட்டமைப்பு வசதிகளை கல்வி ஆர்வலர்களின் மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
விரைவில் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசுப் பணி தேர்வுக்கான பயிற்சிகளை முன்னணி பயிற்சி மையங்களுடன் இணைந்து மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.
கீழை ஹமீது யாசின் நிகழ்ச்சியின் நிறைவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் சமுதாயம் கல்வியில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் பங்கேற்றனர்.