சவுதியில் விசா காலாவதியான கர்நாடக மாநிலத்தவர் ஊருக்கு செல்ல உதவிய தமிழர்கள்
சவுதி: சவுதியில் தவித்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழ்நாடு சமூக நல அமைப்பு ஊருக்கு அனுப்பி வைத்து உதவி செய்துள்ளது.
சவுதி அரேபியா இந்தியர்களின் இரண்டாவது தாயகம் என்பதற்கு மற்றுமொரு சான்று முகமது கற்றப்புறா. கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர். இளம் பிள்ளை வாதத்தால் கால் சற்று சூம்பியவர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் சவுதியில் இக்காமா இல்லாமல் பணியாற்றி வந்தார்.

ஜெத்தாவுக்கு துவக்கத்தில் வேலைக்கு வந்தவர் தொடர்ந்து பணியாற்ற முடியாததால் ஸ்பான்சரிடம் இருந்து வெளியேறி தம்மாம் வந்து பல இடங்களில் பணியாற்றி பின் கடந்த 5 ஆண்டுகளாக அல் கோபரில் சாப்கான் கன்சல்டிங் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக 2 ஆயிரத்து 500 ரியால் சம்பளத்துக்கு தனிப்பிரிவு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
மூன்றாம் வகுப்பு கல்வி, மாற்றுத் திறனாளி, இக்காமா காலாவதி, 67 வயது என எதுவும் அவரை நிலைகுலையச் செய்யவில்லை. அவ்வப்போது ஊருக்குப் போக வேண்டும் என்று வந்து தமிழ்நாடு சமூக நல அமைப்பின் நிர்வாகி திரு. சுரேஷ் பாரதியை சந்தித்து உதவி கேட்டு நிற்பார். அவரைச் சாந்தப்படுத்தி சம்பளம் கிடைக்கும் வரை, போலீஸ் பிடிக்கும் வரை பணியாற்றுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.
சமீபத்தில் அவருக்கு காய்சலும் குளிரும் இரத்த வாந்தியும் வந்தது. மருத்துவ காப்பீடு இல்லாததால் பணம் கொடுத்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவரை விரைவில் ஊருக்கு அனுப்பும் பணியை தமிழ்நாடு சமூக நல அமைப்பினர் (தான்ஸ்வா) துவங்கினார்கள்.
தம்மாம் தூதரக சேவை மையத்தில் பதிவு செய்து, இக்காமா தர்ஹீல் பொறுப்பாளர் தான்ஸ்வா சேவைப் பணியாளர் வெங்கடேஷ் அவர்களிடம் முகமது அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவரின் கைரேகைப் பதிவு ஜெயில் காவல் துறையால் பதிவு செய்யப்பட்டு சிறைத் துறை மேலாளரிடம் வெங்கடேஷ் அவர்கள் அழைத்துச் சென்று மருத்துவ வயது காரணம் சொல்லி சிறையிலிடாமலே பாஸ்போர்ட் விசா எக்ஸிட் பெற்றுக் கொடுத்தார். சாப்கான் நிறுவன ஊழியர் திரு. நிசார் விமான டிக்கெட்டை இலவசமாய் கொடுத்தார்.
இந்நிலையில் முகமது நாடு திரும்பி தனது குடும்பத்தாருடன் உள்ளார். அவர் தொலைபேசி மூலம் வெங்கடேஷுக்கும், சவுதி அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications