அமெரிக்காவையும் அதிர வைத்த நெடுவாசல் போராட்டம்.. நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்
அமெரிக்காவையும் அதிர வைத்து வருகிறது நெடுவாசல் கிராம மக்களின் போராட்டம். நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நியூயார்க்: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் எழுச்சியுடன் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து உலகெங்கும் அமைதி வழியில் தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது நெடுவாசல். அருமையான விவசாய கிராமம் ஆகும். பசுமையான பூமி. இங்கு நெல், கரும்பு, வாழை, மா, பலா என பல வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். காவிரி பாசனப் பகுதியில் வருவது நெடுவாசல் கிராமம்.
விவசாயம் உயிர்ப்புடன் உள்ள கிராமமான நெடுவாசலை தற்போது சுடுகாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் நிறுவனம்.

விவசாயிகளை ஏமாற்றி
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு கிராமத்திற்குள் நுழைந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், வடகாடு கல்லிக்கொல்லை என்ற இடத்தில் மாணிக்கவாசகம் மற்றும் சில விவசாயிகளை அணுகி எண்ணெய் வளம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் நிலத்தில் ஒரு ஆழ்குழாய் கிணறு மட்டும் அமைத்து சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் குத்தகை தருகிறோம் என்று பேசி ஒப்பந்தம் போட்டது. விவசாயிகளும் சரி என்றனர்.

அடுத்தடுத்து வளைக்கப்பட்ட கிராமம்
அதன் பின்னர் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து 100 மீட்டர் தூரத்தில் பெரிய தொட்டிகள் கட்டினார்கள். பல மாதங்களுக்கு பிறகு இரும்பு குழாய்களை ஆழ்குழாய் கிணற்றுக்குள் இறக்கி, கான்கிரீ்ட் போட்டு, அதன் மேலே இரும்பு குழாய்களை பொருத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருந்து வெளிவந்த எரிவாயுவை ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறிவிடாமல் இரும்பு அடைப்புகளை வைத்து அடைத்தனர். கிராமத்தில் பல வயல்களை இதுபோல வளைக்க ஆரம்பித்தனர்.

அடைத்து வைக்கப்பட்ட எரிவாயு
2 ஆண்டுகள் வரை சுமார் 4,500 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து சோதனையில் ஈடுபட்டு, கடைசியில் பல நாட்கள் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுத்து பார்த்தனர். எண்ணெய் கழிவுகளை அருகில் ஒரு தொட்டி அமைத்து கொட்டி வைத்தனர். 10 லாரிகளில் எண்ணெயை கொண்டு சென்றனர். வழக்கம்போல அதில் இருந்து எண்ணெய், எரிவாயு வெளியேறிவிடாமல் இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு சென்றவர்கள், குத்தகை பணம் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் தான் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடகாவை சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பிறகுதான் நெடுவாசல் மக்களுக்கு உண்மை தெரிய வந்தது.

மீத்தேன் திட்டத்தின் மறு பெயர்
உண்மையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத்தான் ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் மாற்றி அமல்படுத்த இறங்கியுள்ளது மத்திய அரசு. மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்பு போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து இப்படி மாற்றுப் பெயரில் இறங்கியுள்ளனர். இந்த காண்டிராக்டை கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளனர். ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவர் என்று சொல்கிறார்கள்.

போராட்டக்களம்
தற்போது நெடுவாசல் போராட்ட பூமியாக மாறியுள்ளது. நெடுவாசல் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் போராட்டம் வெடித்துள்ளது. வெளிநாடுகளிலும் கூட தமிழர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ராச்செஸ்டர் "தமிழ்ஸ் ஆப் கிரேட் ராச்செஸ்டர் " தமிழ் மக்கள் சங்கத்தின் சார்பாக #SaveNeduvasal பதாதைகள் ஏந்தி மத்திய அரசிற்கு தமிழர்கள் தங்களது எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications