விபரீதமான செல்பி ஆசை... ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்
பெய்ஜிங்: சீனாவில் செல்பி எடுக்கும் ஆசையில், தண்டவாளத்தின் மிக அருகே நின்ற இளம்பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள குவாண்டாங்க் மாகாணத்திலுள்ள போஷன் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர்.
அப்போது ஓடும் ரயிலின் முன்புறம் நின்று செல்பி எடுத்துக் கொள்ள அவர் முயற்சித்துள்ளார். இது ஆபத்தானது என மற்ற சுற்றுலாப் பயணிகள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரயில் அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே, தண்டவாளங்களுக்கு அருகே மலைப்பகுதி போன்ற ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கக் கூடாது என பெய்ஜிங் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காரணம் சமீபகாலமாக இது போன்ற செல்பி மரணங்கள் அதிகரித்து வருவதே ஆகும்.
ஆனபோதும், திரில்லான செல்பிக்கள் எடுக்க நினைத்து இது போன்ற ஆபத்துக்களில் சிக்கி வருபவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.