பஹ்ரைன் வானைக் கலக்கிய இந்தியாவின் தேஜாஸ் போர் விமானங்கள்!
பஹ்ரைன்: இந்திய வரலாற்றில் முதன்முறையாக உள்நாட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானமானது பஹ்ரைன் விமானக் கண்காட்சியில் பறந்துள்ளது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிகவும் எடை குறைந்த ‘தேஜாஸ்' என்ற போர் விமானத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்து உள்ளது.
இந்தப் போர் விமானமானது பக்ரைன் நாட்டில் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ள விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. இந்தக் கண்காட்சியானது அந்நாட்டு சாகிர் விமானப்படை தளத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தேஜாஸ் போர் விமானம் வெளிநாட்டு மண்ணுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில், கண்காட்சியின் முதல்நாளான நேற்று தேஜாஸ் போர் விமானம் வானில் பறந்து சாகசங்கள் காட்டியது. இதனை என்.எப்.டி.சி.யின் தலைமை பரிசோதனை விமானியான கமாண்டர் ஜெய்தீப் என்பவர் இயக்கினார்.
இதன்மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் வெளிநாட்டு மண்ணில் முதன்முறையாக பறந்தது என்ற வரலாற்றை தேஜாஸ் படைத்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள ஏரோனாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ‘புதிய வரலாறு படைக்கப்பட்ட இந்த நாளில் இந்த புரோஜெக்டில் தங்களது முன்னோடிகளான மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், கோடா உள்ளிட்டோரை நினைவு கூர்ந்ததாக' ஏரோனாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.