தாய்லாந்தின் புதிய மன்னராக மகுடம் சூடுகிறார் வஜிரலாங்கோன்!
தாய்லாந்தின் புதிய மன்னராக மறைந்த மன்னர் பூமிபாலின் மகன் வஜிரலாங்கோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காக்: தாய்லாந்தின் புதிய மன்னராக மறைந்த மன்னர் பூமிபாலின் மகன் வஜிரலாங்கோன் பொறுப்பேற்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் முறைப்படி அழைப்பு விடுத்தப்பின் அவர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். உலகிலேயே அதிக காலம் அதாவது 70 ஆண்டுகள் மன்னராக ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
அவரது மறைவைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு ஓராண்டு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் பத்தாவது மன்னராக மறைந்த மன்னர் பூமிபாலின் மகன் வஜிரலாங்கோனை ஏற்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தாய்லாந்து பிரதமர், வஜிரலாங்கோனை முறைப்படி சந்தித்து மன்னராக பொறுப்பேற்க அழைப்பு விடுக்கவுள்ளார். இதையடுத்து வஜிரலாங்கோன் புதிய மன்னராக பதவி ஏற்பார்.
புதிய மன்னராக பொறுப்பேற்கவுள்ள வஜிரலாங்கோன் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ராணுவ பயிற்சி பெற்றவர் ஆவர். அவர் தற்போது தாய்லாந்தின் முப்படைக்கான தளபதி பொறுப்புகளையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.