அரசியல் சாசனத்தை மீறுவதா? தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் நீதிமன்றத்தால் அதிரடி பதவி நீக்கம்!
பாங்காங்: தாய்லாந்து நாட்டின் பிரதமர் ஸ்ரேதத்தா தவிசின் அந்நாட்டின் அரசியல் அமைப்பு நீதிமன்றத்தால் அதிரடியாக இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு சட்டவிரோதமாக அமைச்சர் பதவியை வழங்கியது தொடர்பான வழக்கில் அரசியல் சாசனத்தை பிரதமர் ஸ்ரேதத்தா தவிசின் மீறியதை உறுதி செய்த நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. முன்னதாக கடந்த வாரம்தான் தாய்லாந்து எதிர்க்கட்சியை கலைக்க தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மூவ் பார்வார்ட் கட்சி அதிகமான இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் மூவ் பார்வார்ட் கட்சியை அமைக்க விடாமல் ஸ்ரேதத்தா தவிசினின் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

தாய்லாந்து நாட்டில் அரச குடும்பத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மூவ் பார்வார்ட் கட்சி ஜனநாயகக் குரல் எழுப்பியது. இது தொடர்பாக அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையிட்டது.
இதனையடுத்து மூவ் பார்வார்ட் கட்சியை கலைக்க வேண்டும் என்கிற அதிர்ச்சி உத்தரவை அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. அதே நேரத்தில் மூவ் பார்வார்ட் கட்சிக்குப் பதிலாக மக்கள் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. மூவர் பார்வார்ட் கட்சியின் அனைத்து எம்பிக்களும் மக்கள் கட்சியில் இணைந்தும் உள்ளனர்.
இந்த நிலையில் சிறைக்கு சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கு சட்டவிரோதமாக அமைச்சர் பதவி கொடுத்ததாக பிரதமர் ஸ்ரேதத்தா தவிசினுக்கு எதிராக அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தாய்லாந்து நீதிமன்றம், பிரதமர் ஸ்ரேதத்தா தவிசின், அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதை உறுதி செய்தது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து ஸ்ரேதத்தா தவிசினை அதிரடியாக பதவி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இதனால் அந்நாட்டின் ஆளும் கட்சி எம்பிக்கள் ஒன்று கூடி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வங்கதேசத்தில் அண்மையில்தான் மத வன்முறையாளர்களால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இழந்தார். அத்துடன் உயிருக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில் தற்போது தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்திலும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications