“தமிழா தமிழா”.. ஷார்ஜாவில் தமிழர்களின் சங்கம விழா! ஆட்டம் -பாட்டம் -கொண்டாட்டம்! களைகட்டிய கச்சேரி!
ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் "தமிழா தமிழா" என்ற பெயரில் தமிழர்களின் சங்கம கலை விழா நடைபெற்றது.
இதில் "ஆட்டமா தேரோட்டமா", "ஜோடிப் பொருத்தம்", "பாட்டுப் பாடவா", சிறுவர், சிறுமிகளுக்கான ஓவியப் போட்டி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

துபாயில் தமிழா தமிழா குழுமத்தின் தமிழர்கள் சங்கம நிகழ்வு, ஷார்ஜாவில் உள்ள சஃபாரி மாலில் நடந்தது. தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
எழுத்தாளர் ஜெஸிலா பானு மற்றும் சமூக வலைதள செயற்பாட்டாளர் பெனாசிர் அபுபக்கர் ஏற்பாடு செய்திருந்த இந்த கலை விழாவை, ஆர்ஜே அஞ்சனா தொகுத்து வழங்கினார்.
தனி மற்றும் குழு நிகழ்ச்சிகளைக் கொண்ட பரபரப்பான 'ஆட்டமாத் தேரோட்டமா' நடனப் போட்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. குழு நடனப் பிரிவில், TOPZ UAE குழுவும், தனி நடனப் போட்டியில் ஹர்ஷிகா மகேந்திரன் மற்றும் ஸ்வஸ்திகா பாலசுப்ரமணியன் ஆகியோரும் பரிசுகளை தட்டிச்சென்றனர். இதேபோல் பாட்டுப்போட்டியில் செல்வகுமார், ராமமூர்த்தி வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், வண்ணம் தீட்டலில் முகமது சஃப்வானுக்கு முதல் பரிசும், 'பென்சில்' ஓவியப் போட்டியில் விபா ராஜேசுக்கு முதல் பரிசும், அதற்கு அடுத்ததாக அரிபா சித்திக்கிற்கும் பரிசு கிடைத்தது.
தமிழா தமிழா நிகழ்விற்கு முக்கியப் பிரமுகர்களான டிஆர்ஐயின் சுரேஷ், யெஸ் ஈவென்ட்ஸின் ஆனந்த், யூரோடெக் கேஸ் டீபாவின் பால் பிரபாகர், சல்வா இன்டர்நேஷனலின் பகவதி ரவி, யூனிப்ரோவின் ரியாஸ், கேலக்ஸி புக்ஸின் பாலாஜி பாஸ்கரன், ஈமான் பொதுச் செயலாளர் ஹமீத் யாசின், 'கலாட்டா குடும்பத்தின் கோமதி, 'அமீரக குறுநாடகத்தின் ரமா மலர், மற்றும் டான்ஸ் மாஸ்டர் கவிதா பிரசன்னா, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications